July 4, 2011

GET OUT!

ஈக்காடுதாங்கலுக்குப் பின்னால் என்று சொன்னால் அந்த ஏரியாவை சரியாக தெரியாது. தனுஷ் வீட்டுக்கு அருகில் என்று சொன்னால் சென்னை வாசிகளுக்கு புரியும். டிஃபன்ஸ் காலனி என்று பெயர். இராணுவ மருத்துவமனை, இராணுவ குடியிருப்பு என்று மிச்சம் போக பல்லாயிரக் கணக்கான ஏக்கர் இடம் பாக்கியிருக்கும்.

பலநூறு ஏக்கர் காலியிடங்களை முள்கம்பி வைத்து ஃபென்ஸிங் அமைத்து பாதுகாத்திருப்பார்கள் இராணுவத்தினர். அந்த இடங்கள் எதற்கும் உபயோகமில்லாமல் தேமேவென்றிருக்கும். சென்னையில் கிரிக்கெட் ஆட மைதானம் கிடைக்காத இளைஞர்கள் மீதியிருக்கும் பகுதிகளில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

டிஃபன்ஸ் காலனியின் வடக்கு முனை அடையாறு ஆற்றங் கரையோரமாக முடியும். ஆற்றங்கரை நந்தம்பாக்கம் பேரூராட்சியை சார்ந்தது. அங்கிருக்கும் குடியிருப்பு பகுதி பர்மா காலனி. கீழ்நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதி. சினிமாக்களில் அடிக்கடி காட்டப்படும் ஆற்றங்கரை அய்யனார் கோயில் இந்த காலனியின் இறுதியிலும், நந்தம்பாக்கம் கிராமத்தின் தொடக்கத்திலும் அமைந்திருக்கிறது.

நகரில் இருந்து அய்யனார் கோயிலுக்கு செல்பவர்கள் டிஃபன்ஸ் காலனிக்கும், பர்மா காலனிக்கும் இடையே ஊடாகச் செல்லும் சிறுசாலையைதான் பயன்படுத்த வேண்டும். நந்தம்பாக்கம் கிராம மக்களும் கூட நகருக்குள் வர இச்சாலையையே உபயோகித்து வந்தார்கள். வாரயிறுதி கிரிக்கெட் வீரர்களுக்கும் மைதானத்துக்குச் செல்ல இப்பாதை மட்டுமே ஒரே கதி.
கடந்த மாதம் திடீரென இப்பாதை கான்க்ரீட் கழிவுகள் கொண்டு அடைக்கப்பட்டது. இதனால் கிராமமக்கள் பட்ரோடு வழியாக ஊரெல்லாம் சுற்றிக்கொண்டு நகரத்துக்குள் நுழைய வேண்டிய நிலை. பர்மா காலனி வழியாக வருவதாக இருந்தாலும் கார் போன்ற வாகனங்கள் இலகுவாக செல்ல முடியாத குறுகிய பாதை.

பொங்கியெழுந்த மக்கள், தாங்கள் பயன்படுத்தி வரும் பாதையை அடைக்கக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்தார்கள். அனைத்துக் கட்சியினர் ஆதரவோடு மறியலும் செய்தார்கள். அப்பகுதியில் இருந்த இராணுவத்தார் அம்மக்களோடு மோதலில் ஈடுபட்டார்கள். மக்கள் பிரதிநிதியான நந்தம்பாக்கம் பேரூராட்சித் தலைவரிடம் கூட எவ்விதமான மரியாதையான பேச்சுவார்த்தைக்கு இராணுவம் தயாராக இல்லை. போலிஸ் தலையிட்டு மக்களை கலைத்து அனுப்பினார்கள். மாவட்ட ஆட்சியர் வரை இப்பாதை பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டும், இன்றுவரை பாதை மூடப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி புதியதாக முள்கம்பி கொண்டு அடைக்கப்பட்டும் இருக்கிறது.

இப்போது நகரிலிருந்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பட்ரோடு வழியாக சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அல்லது அடையார் ஆற்றின் குறுக்கே போடப்பட்டிருக்கும் தற்காலிக பாதையை பயன்படுத்த வேண்டியிருக்கிறது (அந்த பாலமும் கடந்த வாரம் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது).

நானும் படுக்க மாட்டேன், அடுத்தவனையும் படுக்க விட மாட்டேன் என்கிற இந்திய ராணுவத்தின் உயரிய பண்புக்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் பாதையிலும் கூட, விமான நிலையம் தாண்டிய அடுத்த இடதுபுறப்பாதை இதேபோல பள்ளம் தோண்டியும், கான்க்ரீட் கொட்டப்பட்டும் ராணுவத்தால் மூடப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.

நந்தம்பாக்கம் மட்டுமல்ல. மீனம்பாக்கம், பரங்கிமலை, தாம்பரம், தீவுத்திடல் என்று எங்கெல்லாம் ராணுவத்தினர் நிலை கொண்டிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மக்களுக்கு ரோதனைதான். ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் சாதாரண பொதுமக்களிடம் உரையாடும் மொழியே நாராசமானது. ஒருமுறை Officer Training Academy-க்கு ஒரு சில விளக்கங்களை நாடி சென்றிருந்தோம். வாயிலில் இருந்த வீரரிடம் அடையாள அட்டையை காட்டி, கட்டுரை தொடர்பான விளக்கங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி யாரையாவது சந்திக்க வேண்டும் என்று கோரினோம். பத்திரிகை என்று சொல்லியும் உள்ளேவிட மறுத்தது பிரச்சினையில்லை. “ஒழுங்காக ஓடிவிடுங்கள். TRESPASSING என்று போட்டுத் தள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது தெரியுமா?” என்று அச்சுறுத்தியதுதான் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். மறுபடியும் அடையாள அட்டையை நீட்டி, நாங்கள் PRESS என்று சொன்னோம். “யாராயிருந்தாலும், இராணுவ இடத்துக்குள் நுழைந்தால் எங்களுக்கு சுடுவதற்கு உரிமையிருக்கிறது” என்று திரும்பவும் பயமுறுத்த, பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடிவந்தோம். நகரின் பரப்பளவில் குறைந்தது பத்து, பதினைந்து சதவிகிதமாவது இராணுவத்தினரின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த அம்சம். அவசரத்துக்கு எங்காவது ‘வெளிக்கி’ போகிறவனை கூட (தீவுத்திடலில் இது சகஜம்) இராணுவம் சுட்டுத் தள்ளலாம். TRESPASSING என்று காரணமும் காட்டலாம்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையே கூட இராணுவத்தின் சொத்து என்பதே, சில வருடங்களுக்கு முன்பாக ‘அம்மா’ கொடுத்த அறிக்கையின் மூலமாகதான் மக்களுக்கு தெரிந்தது. ஜோதி தியேட்டர் எதிரே ஆயிரக்கணக்கான ஏக்கரை வளைத்துப் போட்டு பெரிய பச்சை மைதானம் ஒன்றினை நீங்கள் கண்டிருக்கலாம். இராணுவ அதிகாரிகள் முன்பெல்லாம் அங்கே குதிரை ஓட்டுவார்கள். போலோ விளையாடுவார்கள். இப்போது அவர்களுக்கு குதிரை ஓட்டத் தெரியாதோ என்னமோ, சில ஆண்டுகளாக போலோ விளையாடுவதில்லை. வெட்டியாகதான் அந்த (சென்னையின் மிகப்பெரிய) மைதானம் இருக்கிறது. பல லட்ச ரூபாய் பராமரிப்புக்கும் செலவளிக்கப் படுகிறது.

எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி பேருந்து நிறுத்தம் அமைந்திருப்பது கூட ஏதோவொரு இராணுவ அலுவலகத்தின் வாயிலில்தான். முன்பெல்லாம் ‘சைட்’ அடிக்கச் செல்லும் மாணவர்கள் அங்கிருந்த குட்டிச்சுவரில் உட்கார்ந்து ‘தம்’ அடித்துக் கொண்டிருப்பார்கள். யாரோ ஒரு ஜவான் வந்து இந்தியில் காச்மூச்சென்று எச்சரித்துவிட்டுப் போவார்.

சென்னையில் இவ்வளவு இராணுவத்தினர் என்னதான் செய்துக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவர்களுக்கு இவ்வளவு இடம் தேவை? தமிழக அரசாங்கமே தனது தலைமைச் செயலகத்தை கூட இவர்களது வாடகைக் கட்டிடத்தில்தான் நடத்த வேண்டியிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கே இராணுவத்தின் பயன் என்ன? அதிகபட்சமாக டிசம்பர் 6க்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் துப்பாக்கியோடு நிற்பார்கள். தேர்தல்களின் போது சாலையில் அணிவகுப்பார்கள். கொடியேற்றத்தின் போது தென்படுவார்கள். எப்போதாவது விமானப் படையினர் மெரீனாவில் விமான சாகசம் காட்டுவார்கள். இவற்றைத் தவிர்த்து இவர்களால் மக்களுக்கு எந்த நேரடிப் பிரயோசனமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்புகளைவிட இவர்களது ஆக்கிரமிப்பு அக்கப்போர் தாங்கமுடியவில்லை.

இவர்களுக்கு போலிஸ்காரர்கள் லட்சம் மடங்கு பரவாயில்லை. வாங்குகிற சம்பளத்துக்கு (கிம்பளத்துக்கும் சேர்த்து) ஏதோ வேலை பார்க்கிறார்கள். புருஷன் பட்டுப்புடவை வாங்கித் தராவிட்டாலும் கூட, வரதட்சணை கேஸு கொடுக்க பொண்டாட்டி காவல்நிலையத்தைதான் நாட முடிகிறது. ஏதோ ஒருவகையில் (சிக்னலுக்கு சிக்னல் மாமூல் வாங்கினாலும் கூட) மக்களோடு தொடர்பிலேயே இருக்கிறார்கள் போலிஸ்காரர்கள். துரதிருஷ்டவசமாக அவர்களுக்கு வாய்க்கும் கட்டிடங்கள் ‘டொங்காகவே’ இருக்கிறது. தமிழக போலிஸுக்கு இராணுவம் மாதிரி சொத்து, கித்து, நிலம், நீச்சு என்று பார்க்கப்போனால் ஒன்றும் பெரிசாக தேறாது என்றுதான் தோன்றுகிறது. உதவி கமிஷனர் எல்லாம் பணி செய்ய வேண்டியிருக்கும் மடிப்பாக்கம் காவல் நிலையம் கூட, கீழ்க்கட்டளையில் வாடகை கட்டிடத்தில்தான் இயங்குகிறதாக தெரிகிறது. மடிப்பாக்கத்திலிருந்த போது ஒருமுறை இடத்துக்கு சொந்தக்காரர் பிரச்சினை செய்து இவர்களை துரத்தி அடித்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

24 x 7 x 365 நாட்களும் மக்கள் பிரச்சினைகளோடு மல்லுக்கட்டி வாழ்ந்துக் கொண்டிருக்கும் காவல்துறைக்கே இதுதான் கதி. ஆனால் என்றோ ஒருநாள் வரப்போகும் போருக்கு (உலகம் அழியும்வரை சென்னைக்கு போர் வராமலேயே கூட போகலாம்) துப்பாக்கியை எண்ணெய் போட்டு துடைத்துக் கொண்டிருக்கும் இராணுவத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், அதிகாரம்?

எங்கள் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் இராணுவத்தினரை தனிப்பட்ட முறையில் அறிவேன். பதினைந்து, இருபது ஆண்டுகாலம் இராணுவத்தில் சேவை புரிந்தவர்கள். ஒரு போருக்கு கூட இவர்கள் போனதில்லை. அவ்வளவு ஏன்? ஒரு வாய்க்கா, வரப்பு தகராறினை கூட இவர்களது பணிக்காலத்தில் இவர்கள் சந்திக்க நேர்ந்ததில்லை. வெறும் பயிற்சி, பயிற்சி, பயிற்சிதான். வீரர்களே இப்படித்தான் என்றால், அதிகாரிகள் நிலையை சொல்லியாக வேண்டியதில்லை. இவர்களுடைய சம்பளம், பணிக்காலத்துக்குப் பிறகான சலுகைகள் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், ஐடி ஊழியர்களே பொறாமைப் படுவார்கள் (என்னைப் போன்றவர்கள் அங்கே சீப்பாக கிடைக்கும் ரம்முக்குதான் வாயிலும், வயிற்றிலுமாக அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது).

இப்படிப்பட்ட இராணுவத்துக்கு ஏன் சென்னையில் கால் வாசி இடத்தை தாரைவார்த்து தரவேண்டும்? போர் வரும்பட்சத்தில் வந்து எல்லா இடத்தையுமே கூட எடுத்துக் கொள்ளட்டுமே? எல்லா இடமும் இவர்களுடையது என்கிற அதிகார மமதையால்தானே பாதாங்கொட்டை எடுக்கவந்த பதிமூன்று வயது சிறுவனை படுகொலை செய்திருக்கிறார்கள்? பட்டவர்த்தனமாக படுகொலை என்று தெரிந்தும் கூட, தமிழக முதலமைச்சரே நடவடிக்கை எடுக்க இயலாமல் இராணுவத்துக்கு வேண்டுகோள்தான் விடுக்க வேண்டியிருக்கிறது. இங்கே கடவுளுக்கு அடுத்து அதிக அதிகாரம் படைத்தவர்கள் இராணுவத்தினரா?

நாளை டிஃபன்ஸ் காலனியில் கிரிக்கெட் ஆடச்செல்லும் இளைஞர்கள் கூட இவர்களால் வேட்டையாடப்படலாம். இராணுவம் இங்கே மக்களுக்கு உதவிகரமாக இருப்பதற்குப் பதிலாக உபத்திரவமாகவே இருக்கிறது. இவர்களால் நகர மக்களுக்கு என்ன பாதுகாப்பு?

தமிழக அரசின் நிர்வாகப் பணிகளுக்கு கூட போதிய அலுவலகங்கள் இல்லாத நிலையிலிருக்கும் போது இராணுவம் சும்மாவே எல்லா இடங்களையும் வளைத்துப் போட்டிருப்பது அநீதியாகப் படுகிறது. புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களை விரட்டியடிக்கும் தமிழக அரசு, பயன்படுத்த வழியில்லாமல் இராணுவத்திடம் அடைபட்டிருக்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். பதிலுக்கு வேண்டுமானால் எங்கேயாவது வண்டலூர் காடு தாண்டி இருக்கும் தரிசு இடங்களை அளித்துக் கொள்ளட்டும். இனியும் நகரத்துக்கு நடுவில் வசதியாக அமர்ந்துக் கொண்டு இவர்கள் அட்டூழியம் செய்ய அரசு அனுமதிக்கக் கூடாது.

வேண்டுமென்றே இக்கட்டுரையை எழுத ஒரு அபத்தமான கருத்து மையத்தையும் , மொழிநடையையும் கையாண்டிருக்கிறேன். சீரியஸாக பேசினால், தில்ஷனை போட்டது மாதிரி போட்டுவிடுவார்களோ என்கிற அச்சமும் ஒரு காரணம். ஆயினும் இங்கிருந்து இந்திய இராணுவம் வெளியேற நிஜமான நியாயமான காரணங்கள் ஏராளமாக இருக்கிறது. அவற்றை பிரிதொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம். இக்கட்டுரையை வாசிக்கும் ஒரேயொரு சென்னைவாசியாவது, “ஆமாம். இவங்களுக்கு இங்கே என்ன வேலை?” என்று சீரியஸாக சிந்தித்தால் போதுமானது

42 பின்னூட்டங்கள்:

jaisankar jaganathan said...

"GET OUT!"

சந்திரமௌளீஸ்வரன் said...

இந்தப் பதிவு இராணுவம் அதன் செயல்பாடுகள் குறித்த உங்களின் பரந்த தகவலறிவைக் காட்டுகிறது சபாஷ்

யுவகிருஷ்ணா said...

மவுலி சார்!

நீங்கதான் நான் கன்வின்ஸ் ஆகிறமாதிரி இராணுவத்தின் செயல்பாடுகள் பத்தி சொல்லுங்களேன் :-)

Manion said...

உங்கள் சிந்தனைக்கு தலைவணங்குகிறேன்! வெளியே போ!

சந்திரமௌளீஸ்வரன் said...

உங்களைப் பாராட்டி சபாஷ் சொல்லிருக்கேனே

யுவகிருஷ்ணா said...

பெங்களூர்லேயும் மிலிட்டரி தொல்லையாம் :-( http://www.bangaloremirror.com/article/10/201107042011070400085887310060c47/Armed-jawans-Dy-Mayor-face-off-in-JC-Nagar.html

thenali said...

ராணுவம் பாதுகாப்பு துறை அமைச்சரின் கீழ்தானே வருகிறது? தமிழகத்திலிருந்து போன அமைச்சர்கள் பாதுகாப்பு மந்திரியைப் பார்த்து இது குறித்து இதுவரை கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க சொல்லி பேசினார்களா?

அதுசரி அவர்களுக்கு திகார் அக்கப்போருக்கே நேரம் சரியாக போய்விடுகிறதே!

VISA said...

ஒரு நாள் ஒரு கருப்பு நிற அம்பாஸிடர் கார் எங்கள் தெருவுக்குள் வந்தது.
அதன் கொண்டையில் சிகப்பு விளக்கு இருந்தது. கொண்டையில் ஆனாலும் .....கோபுரத்தில் ஆனாலும் சிகப்பு விளக்கு என்றாலே எனக்கு அலர்ஜி.
சாலைகளில் சிகப்பு விளக்கு வாகனங்களின் தீவிரத்தை பார்க்கிற போது அவை நமக்காக(மக்களுக்காக) இயக்கப்படுகின்றனவா இல்லை நம்மை "ஓடுடா ஓடுடா ஓரமா ஓடுடா" என்று விரட்ட இயக்கப்படுகின்றனவா என்றே ஐயமுறுவேன்.

அந்த கருப்பு நிற அம்பாஸிடர் கார் தெருவில் ஒரு இடத்தில் நின்றது.
அது ராணுவ அதிகாரிக்கு சொந்தமான வண்டி. சீருடையில் ஒருவர் வந்து பின் கதவை திறந்து விட ஒரு அறுபது வயது அம்மையார் இறங்கினார். ஒரு சின்ன கடைக்குள் நுழைந்தார்.

அது ஒரு டெயிலர் கடை. பிளவுஸ் தைப்பதில் அவர் எக்ஸ்பர்ட்.

ராணுவ வாகனம்.
ஓட்டுனர் சம்பளம்.
70 ரூபாய் பெட்ரோல்.
ஜன்னல் வைத்த ஜாக்கெட்டின் கடைசி கொக்கி. வாழ்க ஜனநாயகம்.

சேலம் தேவா said...

போரிடும் நாட்டுக்காரர்களிடம் கடுமையாக நடக்கவேண்டியதுதான்...நம் நாட்டு மனிதர்களிடமும் இவர்களுக்கு ஏனிந்த வெறுப்பு..!!

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

யுவா!

தம்மாண்துண்டு இலங்கை ராணுவம் 'இந்திய' மீனவர்களை பொழுது போக்காக போட்டு தள்ளும்போது தனது இருப்பை வெளிகாட்டாத இந்திய ராணுவம் அப்பாவி சிறுவனை பயங்கரவாதி கணக்காய் பலி கொண்டிருப்பது வெட்ககேடானது.

நம்மில் நிறைய அறிவுஜீவிகள் ஜனநாயக பெருச்சாலிகளை அடக்க ராணுவ ஆட்சி வேண்டி தவமிருக்கிறார்கள். இராணுவம் ஆண்டால் ஊழல் கைமாறும். உரிமை பறிபோகும். இப்படி நெட்டில் புலம்ப கூட முடியாது!

அமுதா கிருஷ்ணா said...

இராணுவத்தில் பணிபுரிபவர்களை காட்டிலும் அவுங்க வீட்டு அம்மாக்கள் பண்ற அலம்பல்கள்..லண்டனிலிருந்து நேராக இங்கே குதித்தவர்கள் மாதிரி இருக்கும்.ஆமாம் எதுக்கு இவ்வளவு இடம்?

thamizhan said...

ithu british period-la seytha erpaadu.kandippaaka maru pariseelanai seyyavendum.Tambaram,coimbatore,
Ooty enru tamilnadu pooraavum ivarkalukku idam (antha kaalaththil othukkapattathu)ullathu.Coonoorilum adikkadi makkalidam pirachchinaikal erpattu police case aaki ullathu.itharku oru sariyaana theervu kaana ithuthaan sariyaana neram!

thamizhan said...

maanila arasu ithil ethuvum seyya mudiyaathaam.makkal periya alavil pukar koori,maththiya arasuthaan nadavadikkai edukka mudiyumaam.

ஜோ/Joe said...

நியாயமான கேள்விகள். வழிமொழிகிறேன்.

Mohan K said...

Imagine how bad this rouge military would have acted in Srilanka

Palay King said...

Good One..

Rathnavel said...

அருமையான பதிவு.

செம்மலர் செல்வன் said...

யுவா,அருமையா எழுதி இருக்கீங்க. இவங்க பண்ற டார்ச்சர் தாங்க முடிவதில்லை.

sivakasi maappillai said...

ஆமாம்... எதுக்கு இராணுவத்துக்கு இவ்ளோ இடம்...

எதுக்கு தீயனைப்புதுறைக்கு இவ்ளோ இடம்....

எதுக்கு சட்ட சபைக்கு இவ்ளோ இடம்...

எதுக்கு திமுக காரனுங்களுக்கு அணணா சாலை ல இவ்ளோ பெரிய இடம்...

எதுக்கு தியேட்டர்காரனுங்களுக்கு நகரின் முக்கியமான இடங்களில் இடம்...

எதுக்கு ஜவுளிகடைக்காரனுங்களுக்கு தி நகர்ல அவ்ளோ இடம்...

எதுக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு அவ்ளோ இடம்...

எதுக்கு பஸ்ஸ்டாண்ட்னு அவ்ளோ இடம்

எதுக்கு 6*3ல மூடப்படபோற மனுஷனுக்கு வீடுன்னு அவ்ளோ பெரிய இடம்....

பித்தன் said...

யுவா அருமையான மொழி நடை நான் முழுதும் உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன்...... நீங்கள் சொன்ன்னது மாதிரி இவர்கள் ஊர் எல்லை தாண்டி போக வேண்டியதுதான்.....

சந்திரமௌளீஸ்வரன் said...

சென்னை நகரின் பரப்பு சுமார் 1200 சதுர கிமீ இருக்கும் இதில் பத்து சதம் எனில் 120 சதுர கிமீ. இத்தனை பரப்பா இராணுவத்துக்கு சொந்தமாக இருக்கிறது ???

ஆபிசர் ட்ரெயினிங் அகாதமி அமைந்துள்ள பரப்பு 650 ஏக்கர் இது சுமார் 2.60 சதுர கிலோமீட்டர்; இப்படியே சென்னையில் இராணுவம் இயங்கும் இடங்களைக் கணக்கிட்டாலும் 120 சதுர கிமீ என்பது டௌட்புல் ஃபிகர்

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிஏ வில் இருக்கும் நூலகத்திற்கு ஒரு ரெபரென்சுக்காக சென்றிருக்கிறேன். முன் அனுமதியினை சாதாரண கடிதம் மூலம் தான் எழுதிப் பெற்றேன்

//எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி பேருந்து நிறுத்தம் அமைந்திருப்பது கூட ஏதோவொரு இராணுவ அலுவலகத்தின் வாயிலில்தான்.//ஊடகப் பணியில் இருக்கும் நீங்களா இப்படிச் சொல்வது அது கன்ட்ரோலர் ஆஃப் டிபென்ஸ் அக்கௌன்ட்ஸ் அதுக்கு தனியா வெப்சைட் இருக்கே http://www.cdachennai.nic.in/homepage.html

Ranjith said...

நீங்கள் சொல்வது அனைத்தும் சரியானதே
GET OUT PLEASE

Anonymous said...

ராணுவம் என்ன கே.என்.நேருவா இல்லை அழகிரியா இல்லை வீரபாண்டி ஆறுமுகமா, அதற்கு எதற்கு இத்தனை நிலம் என்று உடன்பிறப்பு லக்கிலுக் கேட்பதில் நியாயம் உண்டு. திமுகவினர் ஆக்ரமித்தது போக சென்னையில் இத்தனை நிலம் ராணுவத்திடம் இருக்கிறதே, அதை நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று லக்கிலுக் படும் வேதனை நமக்குப் புரிகிறது. இப்போதுதான் ஹன்ஸ் ராஜ் சக்சேனா சிறைக்கு போயிருக்கிறார். இன்னும் பல ஆக்ரமிப்பு பேர்வழிகளும்
கம்பி எண்ணப்ப் போகிறார்கள்.

Deepak said...

http://www.thehindu.com/news/cities/Chennai/article2161661.ece

So, Just shut up.

Pradeep said...

“ஆமாம். இவங்களுக்கு இங்கே என்ன வேலை?”

Good one Yuvaa!!!!

Kannan said...

என்ன தல, மதுரைல கடந்த ஐந்து வருடங்களாக ஒரு கோடி அல்லது அதற்க்கு அதிகமான மதிப்புள்ள இடங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்றால், "அண்ணன்" சொன்னால் தான் நடக்கும். அண்ணனுக்கு பிடித்து போய்விட்டால், அவர் சொன்ன விலைக்கு கொடுத்து விட வேண்டும். இதை விடவா ராணுவத்தினர் கொடுமை படுத்துகின்றனர்!

Anonymous said...

Now you can imagine, how people army can make people to suffer in the army occupied states, in the name of safety and security.

கிருபாநந்தினி said...

\\வேண்டுமென்றே இக்கட்டுரையை எழுத ஒரு அபத்தமான கருத்து மையத்தையும் , மொழிநடையையும் கையாண்டிருக்கிறேன்.// அப்படி ஒண்ணும் தெரியலீங்களேண்ணா! எல்லாமே சரியா, தெளிவா, புரியும்படிதானே எழுதியிருக்கீங்க. சொல்லப்போனா, உங்களோட இந்தப் பதிவு மூலமாதான் பிரச்னையை முழுசா புரிஞ்சிக்கிட்டேன் நான்.

Julian Christo said...

Dear Lucky,

Military Van accident panna, case kidayathu theriyuma.

Aama namakku ethuku vettiya ivlo raanuvam.

Cheers
Christo

dhanu said...

கடுமையாக ஆட்சேபிக்கிறேன் லக்கி.

\\அதிகபட்சமாக டிசம்பர் 6க்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் துப்பாக்கியோடு நிற்பார்கள். தேர்தல்களின் போது சாலையில் அணிவகுப்பார்கள். \\

என்ன ஒரு கேவலமான உதாரணம்..
சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் அவர்கள் டீ குடிக்கவா செல்கிறார்கள். உங்கள் மனைவியும், மக்களும் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்வதற்கு நல்ல பாராட்டு பத்திரம்...

தப்பு செய்வது யாராக இருந்தாலும் சுடுவார்கள் என்று தெரிவதனால்தான் தேர்தலில் ராணுவம் இருக்கும் இடங்களில் வன்முறை நடப்பதில்லை.

னீங்கள் கிரிக்கெட் ஆடவில்லையென்று யார் அழுதார்கள்?

\\பயன்படுத்த வழியில்லாமல் இராணுவத்திடம் அடைபட்டிருக்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.\\

அந்த இடத்தில் தியேட்டரோ, ஷாப்பிங் காம்ப்ளக்சோ, சினிமா கலைஞர்களுக்கு நகரமோ வரும். அல்லது எம்எல்ஏக்களுக்கு அந்த இடம் வழங்கப்படும். அதற்கு இப்படி இருப்பதே மேல்.

\\போர் வரும்பட்சத்தில் வந்து எல்லா இடத்தையுமே கூட எடுத்துக் கொள்ளட்டுமே?\\

அப்படியே குடுத்திட்டுதான் மறுவேலை பார்ப்பீங்க..

\\ஆனால் என்றோ ஒருநாள் வரப்போகும் போருக்கு (உலகம் அழியும்வரை சென்னைக்கு போர் வராமலேயே கூட போகலாம்) துப்பாக்கியை எண்ணெய் போட்டு துடைத்துக் கொண்டிருக்கும் இராணுவத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், அதிகாரம்?\\

உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட்டீர்களா லக்கி ???

தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது...

ராமச்சந்திரன் said...

//பதினைந்து, இருபது ஆண்டுகாலம் இராணுவத்தில் சேவை புரிந்தவர்கள். ஒரு போருக்கு கூட இவர்கள் போனதில்லை. அவ்வளவு ஏன்? ஒரு வாய்க்கா, வரப்பு தகராறினை கூட இவர்களது பணிக்காலத்தில் இவர்கள் சந்திக்க நேர்ந்ததில்லை //

அருமை :-)

Praveen said...

Vetti naaigal. Namma solthaiye thinnuttu nammaiye kolranunga.
Modern day imperialism.

Seshadri said...

You should know the difference between military and police.

protected area means, all external actions must restrict.

in camp protocol if you failed to say correct code word, immediate action can taken to anybody.

if i allow for mango or lemon can any one pickup then vigil is useless.

i am sure you also know the truth behind this scene but you are acting more emotional man for sympathy or something.

military is like wild (hunting) dog, you should aware you should not think like domestic dog.

அரைகிறுக்கன் said...

அப்படியே சென்னையில இருந்து கொண்டு போயி பாக்.ல கொஞ்சம் ஆப்கான்ல கொஞ்சம் வச்சுடலாம். அதுதான் சரி.

Anonymous said...

நாங்கள் PRESS...this how most of u misuse all ur press freedom....will you allow ur land to taken by other people if it had used by them for sometime? try to respect army ppl and all the army ppl r not villan...respect the nation by respect army

cheena (சீனா) said...

அன்பின் லக்கி - ஆதங்கம் புரிகிறது. சாதாரணமாக சிந்தித்தால் ஜஸ்ட் கெட் அவுட் தான் சொல்ல வேண்டும். ஆனாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக, அவர்களுக்கு இவ்வளவு அதிகாரங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. வழங்கியவர்கள் சிந்திக்காமலா இருந்திருப்பார்கள் ? இன்றும் உச்ச நீதி மன்றம் வரை இவர்க்ளைத் தட்டிக் கேட்க இயலாதென நினைக்கிறேன்.

Anonymous said...

உலகில் ராணுவ பலத்தில் நான்காம் இடம் இந்தியா, ஆட்கள் எண்ணிக்கையில் மூன்றாம் இடம். இவை அத்துனையும் தான் அருணாச்சலை சீனாவிடமிருந்தும், காஷ்மீரை பாக்'கிடமிருந்தும் காக்க உதவுகின்றன. இதற்காகத்தான் இந்தியா ராணுவத்திற்கு அதிகம் செலவிடுகிறது.


ராணுவம் என்பது முன்னெச்சரிக்கை அடிப்படையிலேயே செயல்படுகிறது. ஒரு வேளை இங்கு ஏதேனும் ஆபத்து வந்தால் ராணுவம் கூடுவதற்கு ஏதுவாக நல்ல பரந்த இடம் தேவை. அதற்காகத்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் போதிய இடம் ராணுவத்திற்கு வழங்கப்படுகிறது. அதே போல தான் சென்னையிலும்.


நீங்கள் சொல்வது போல TressPassers அந்த ஊர் மக்களாகவே இருந்தாலும் ராணுவ சட்டம் ஒன்றை அவர்கள் கடைபிடித்தாக வேண்டுமே! அதை மீறும் பட்சத்தில் ராணுவம் நடவடிக்கை எடுக்கத்தானே செய்யும்?


ஒரு விஷயத்தை மட்டும் ஒப்புக் கொள்கிறேன். ராணுவம் மக்களிடம் நடந்து கொள்ளும் முறை, அது மட்டும் அடக்கு முறை தான்.


அதல்லாம் சரி யுவா சார்.. அதெப்படி சென்ட்ரல் ராணுவத்திற்கும் ஸ்டேட் உடன்பிரப்புக்களுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்?

Unmai said...

மதுரை அழகிரிக்கும் இதுக்கு என்ன சம்பந்தம்?? நம்ம ஆளுக ராணுவத்தை பத்தி பேசினா சிந்திக்காமலே பேசுவாங்க...
சீனா நினைச்சா ஒரு நிமிசம் போதும். போட்டு தள்ளுவதற்கு.. சீனாவிடமிருந்து காப்பாற்றுகிறார்கள் ‍‍ரொம்ப சின்னபிள்ளை தனமா இருக்கு.
காஷ்மீரிலும், அருணாசல் பிரதேசத்திலும் இவனுக தான் பிரச்சினையே...
இங்க பயங்கரமா பேசினா ஆட்கள் தங்கள நிலத்தை ராணுவத்துக்கு கொடுத்து விட்டு தன் நாட்டுபற்றை நிருபீப்பார்கள் என்று நம்புவோமாக...

suba said...

naan arinthavarai, por thaakuthalil muthalil thaakkapaduvathu raanuva mugaamgalthaan. aththagaiya thaakuthalgalinpothu pothumakkalukku paathippu irukka koodathu enbatharkaagathaan avvalavu periya nila parappu vida pattu irukkirathu enre ninaikkiren.

suba said...

naan arinthavarai, raanuva thaakkuthalgalinpothu muthalil thaakkappaduvathu raavuva mugaamgalthaan.

aththagaiya thaakkuthalgalinpothu pothumakkal paathikkappadaamal irukkaththan avvalavu periya nila parappu vidappattu irukkirathu enru naan ninaikiren. naan sonnathil thavarirunthaal sutti kaattavum.

sukumaran said...

the lands are allotted to the miltry at the time of combined states of kerala karntka and ap so the lands are allotted to the defence is toooo much

Anonymous said...

இன்னும் கொஞ்ச வருசத்துல இலங்கையில இருந்து சீன காரனோடு படை எடுக்கும் போது தெரியும் இவங்க தேவைன்னு