April 25, 2011

கோ

படம் சூப்பர்ஹிட் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். ப்ரிவ்யூ பார்த்த ஷங்கர் ‘வடை போச்சே’ என்று நினைத்திருப்பார். சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி, பொலிடிக்கல் ஃபேண்டஸி, டெவோஷனல் ஃபேண்டஸி என்று எத்தனையோ ஃபேண்டஸி தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது. இது சற்றே வித்தியாசமானது. ஃபேண்டஸி ஜர்னலிஸம்.

ஹீரோ புகைப்படக் கலைஞர். க்ளிக்கி, க்ளிக்கி நாட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறார். பாலகுமாரனின் ‘உயிர்ச்சுருள்’ கதை நினைவுக்கு வருகிறது. அதிமுக உடைந்து, தலைமைக் கழகத்துக்கு இரண்டு கோஷ்டிகளும் அடித்துக் கொண்டபோது, ‘நக்கீரன்’ புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படங்களும், அதன் பின்னான பிரச்சினைகளுமே ‘உயிர்ச்சுருள்’. “எங்க கதையை எங்க அனுமதி இல்லாமே இந்தியா டுடேவுக்கு எழுதிட்டார்” என்று கோபால் அண்ணாச்சி கூட பிரச்சினை செய்ததாக நினைவு.

ஹீரோ வேலை பார்ப்பது ஒரு தின இதழில். பெயர் தின அஞ்சல். தினமலரை மனதில் வைத்துக்கொண்டு, காட்சிகளை அமைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். ஆனால் பத்திரிகை அலுவலகம் ‘வாஷிங்டன் போஸ்ட்’ ரேஞ்சுக்கு இருக்கிறது. ஸ்பைடர்மேன் படத்தில் வரும் பத்திரிகை அலுவலகம் நினைவுக்கு வருகிறது. அனேகமாக ஏதோ கால் சென்டரிலோ அல்லது சேட்டிலைட் டிவி அலுவலகத்திலோ படப்பிடிப்பு நடந்திருக்கலாம். ஊமை விழிகள் படத்தில் காட்டப்படும் ரேஞ்சில் தமிழ் பத்திரிகை அலுவலகங்கள் மொக்கையாக சமகாலத்தில் இல்லையென்றாலும் (எது இருக்கிறதோ இல்லையோ, அங்கங்கே சம்பந்தா சம்பந்தமில்லாமல் கம்ப்யூட்டர்கள் நிறைய இருக்கும்), சர்வநிச்சயமாக ‘கோ’ ரேஞ்சில் இல்லை. நிருபர்களின் மேசை, பெண் நிருபர் கார்த்திகாவின் மேசை அளவுக்கு நிச்சயமாக நீட்டாக இருக்க வாய்ப்பேயில்லை. ஒருவேளை எந்த நிருபரின் டேபிளாவாது இவ்வளவு க்ளீனாக இருக்குமேயானால், சம்பந்தப்பட்ட நிருபர் வேலை பார்க்காமல் ஓபி அடிக்கிறார் என்று அர்த்தம்.

பத்திரிகை போட்டோகிராபரான ஜீவா, ஹீரோ என்பதால் பைக் வீலிங், ஸ்டண்ட் என்றெல்லாம் ஹீரோயிஸம் செய்வதை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. முன்னாள் பத்திரிகை புகைப்படக் கலைஞரான கே.வி.ஆனந்த், இந்த சீன்களை சிரித்துக்கொண்டே எடுத்திருக்க வாய்ப்பு அதிகம். ஆனால் பாருங்க சார். பிரஸ்மீட் ஒன்றில் பெண்நிருபர் ஃபியா டூபிஸில் அயிட்டம் டான்ஸ் ஆடுவதாக எடுத்திருப்பதெல்லாம் கொஞ்சமல்ல, ரொம்பவே ஓவர். பத்திரிகையுலகப் பெண்போராளிகளே, எப்படி இந்த ஆட்டத்தையெல்லாம் சகித்துக்கொண்டு இன்னமும் அமைதியாக இருக்கிறீர்கள்?

எதிர்க்கட்சித் தலைவர், ஒரு பதிமூன்று வயதுப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்று ஒரு ‘ஸ்டோரி’ ரெடி செய்து கொடுக்கிறார் நிருபரான கார்த்திகா. எடிட்டர் கேட்கிறார் சோர்ஸ் என்னவென்று. உடனடியாக கார்த்திகா ஒரு ரெகார்டரை காட்டி, மொத்தமா ரெகார்ட் செய்திருக்கிறேன் என்கிறார். உடனே ஸ்டோரி ஓக்கே ஆகிறது. இப்படி ஒரு பத்திரிகையும், எடிட்டரும் எங்கிருக்காங்கன்னு சொல்லுங்க ஆனந்த் சார். உடனே ஓடிப்போய் வேலையில் சேர்ந்துக்கறோம். அதுபோலவே எடிட்டர், ஃபிரண்ட் பேஜை ரெடி பண்ணி வையுங்க. நான் ஒன் அவர்லே மெட்ராஸ் வந்து ஓக்கே பண்ணுறேன் என்று ஃப்ளைட்டில் இருந்து சொல்கிறார். கார்த்திகா மேட்டரை ரெடி செய்வதோடு இல்லாமல், பக்காவாக லே-அவுட்டெல்லாம் கூட செய்து வைக்கிறார். சூப்பர்.

இந்தப் படம் பார்க்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ‘இந்தியா 2020’ மாதிரி புது லட்சியம் ஒன்று தோன்றும். ‘எப்படியாவது ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கணும்’ என்று. இளைஞர்களே. படம் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். சர்வசத்தியமாக இந்தப் படத்தில் காட்டப்படும் பத்திரிகைச்சூழல் நிஜத்தில் இல்லை. கே.வி.ஆனந்த் வேலைபார்த்த கல்கியில் மட்டும்தான் எய்ட் அவர் டூட்டி எல்லாம். பெரும்பாலான பத்திரிகைகளில், ஒரு பத்திரிகைக்காரன் ட்வெண்டி ஃபோர் அவர்ஸும் பத்திரிகைக்காரனாக இருக்கணும் என்று ராணுவ மேஜர் மாதிரி வசனம்தான் எடிட்டர் பேசுவார். பெட்ரோல் கன்வேயன்ஸ் கூட கிலோ மீட்டருக்கு ரெண்டேமுக்கா ரூபாதான் கொடுப்பாங்க. பார்த்துக்கோங்க. Be careful. அதேமாதிரி படத்தில் காட்டப்படும் பெண் நிருபர்கள் மாதிரி, ஃபுல் மேக்கப்பில், எப்போ பார்த்தாலும் உங்களை ‘லவ்’ பண்ண சுற்றி சுற்றி யாரும் வந்துக்கொண்டிருக்க வாய்ப்பேயில்லை. எனவே உங்க லட்சியத்தை ஒன்றுக்கு, ஆயிரம் முறை மீள்பரிசீலனை செய்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் ஓக்கே.

நக்சலைட்டுகளை ஏன் ஆனந்த் சார் அவ்ளோ மோசமா காட்டுனீங்க? கூலிப்படை மாதிரியும், கொலை, கொள்ளைக்காரர்கள் ரேஞ்சுக்கும். நிச்சயமா அவர்கள் சினிமாக்காரர்கள் மாதிரி இல்லை. குறைந்தபட்சம் அவர்களுக்கு ‘லட்சியம்’ என்று ஏதோ ஒன்று இருக்கிறது. நக்சல்பாரிகள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு தனிமனிதர்களை அழிப்பதில்லை. அவர்களுக்கு பிரச்சினை அமைப்பின் மீதுதானே தவிர, மனிதர்கள் மீதல்ல. வேண்டுமானால் அமைப்பின் பிரதிநிதிகள் மீது சில சந்தர்ப்பங்களில் ‘அழித்தொழிப்பு’ நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம். பக்காவான க்ளீன் மர்டர் செய்யுமளவுக்கு கொடூரர்களாக எப்படி சித்தரித்தீர்கள்?

விடுங்கள். நீங்களே நக்சலைட் கதிர் பேசும்படி ஒரு வசனமும் வைத்திருக்கிறீர்கள். “ஒடுக்கப்பட்டவனை ஒருநாளும் நீங்கள்லாம் புரிஞ்சுக்கவே முடியாது”. அந்த வசனத்தை எதிர்கொள்ளும் ஹீரோ புரிந்துகொள்வானோ, இல்லையோ. எந்நாளும் கே.வி.ஆனந்த்களும், சுபாக்களும் புரிந்துகொள்ளவே மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.

கோ – காதுலே பூவை சொருகிட்டு GO.

17 பின்னூட்டங்கள்:

சூர்யா said...

//அதேமாதிரி படத்தில் காட்டப்படும் பெண் நிருபர்கள் மாதிரி, ஃபுல் மேக்கப்பில், எப்போ பார்த்தாலும் உங்களை ‘லவ்’ பண்ண சுற்றி சுற்றி யாரும் வந்துக்கொண்டிருக்க வாய்ப்பேயில்லை. எனவே உங்க லட்சியத்தை ஒன்றுக்கு, ஆயிரம் முறை மீள்பரிசீலனை செய்துக் கொள்ளுங்கள்//

கண்டிப்பா யுவி. இது ஒண்ணுக்கு நூறு முறை யோசித்துப் பார்க்க வேண்டியதுதான். படத்தில் சில அதிபயங்கர காட்சிகளும் இருந்தன. கார்த்திகா வீட்டுக்கு இரவில் வரும் காட்சிகள். அவற்றைப் பார்த்து நான் திரையரங்கிலேயே அலறிவிட்டேன். (மெய்யாலுமே!)

கொடுத்த காசுக்குக் குறைவில்லாம, 1 item song, ரெண்டு மூணு காதல் பாட்டு, (But locations superb) இருந்தச்சி. நீங்க அஜ்மல் பத்தி சொல்லுவீங்கன்னு நினைச்சேன். ஆனா, எளிமையா முடிச்சிட்டீங்க...

இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம் தல...

வேதாளம் said...

எதை எடுத்தாலும் 'ஆ' என்று அதிசயப்பட்டு பார்க்கும் வர்க்கத்திற்கு உங்கள் விமர்சனம் ஒரு தெளிவு. மற்றபடி சுவாரசியமாக நேரத்தை போக்க கோ ஒரு நல்ல படம்.

Anonymous said...

என்ன செய்வது silukuvarpatti எழுதுகிறவர்களுக்கு தான் ஒடுக்கப்பட்டவனை புரிந்து கொள்ள முடியும் .

Regards
S Baskar

r.selvakkumar said...

கோ படத்திற்கு நான் வாசித்ததிலேயே சிறந்த விமர்சனம் இதுதான்.

//எத்தனையோ ஃபேண்டஸி தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது. இது சற்றே வித்தியாசமானது. ஃபேண்டஸி ஜர்னலிஸம்.//
நறுக்கென்று மிக அழகாக புது கதாநாயகியை அறிமுகம் செய்வது போல எழுதியிருக்கீங்க.

படத்தில் இருக்கும் மெல்லிய நகைச்சுவை, உங்கள் விமர்சனத்திலும் உண்டு. பத்திரிகை துறையில் இருக்கும் அனைவருக்குமே இந்த நகைச்சுவை உண்டோ? என்ற ஐயம் எனக்கு உண்டு.

க்ளிக்கி க்ளிக்கியே, ஒரு ஆட்சி மாற்றத்தை உண்டு பண்ணி, அதை காப்பாற்றவும் முடியும் என்பதை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள்.

ஜென்டில்மேனை முதன் முதலில் பார்த்தபோது ஏற்பட்ட மசாலா திருப்தி எனக்கு இந்தப் படத்திலும் ஏற்பட்டது.

கோயிஞ்சாமி எண் 408 said...

//பெட்ரோல் கன்வேயன்ஸ் கூட கிலோ மீட்டருக்கு ரெண்டேமுக்கா ரூபாதான் கொடுப்பாங்க. பார்த்துக்கோங்க. Be careful. //

லக்கியின் பைக் மைலேஜ்படி பெட்ரோல் செலவு. ரூ 1.25 தான். ரூ 1.50 லாபம் லிட்டருக்கு. இது பத்தாதா உடன்பிறப்பே....

அடுத்த மாசத்தில் இருந்து லிட்டருக்கு ரூ.2.00 தான் கொடுக்க வேண்டும்.

அஜ்மல் கேரக்டர் பிணத்தின் மீது அரசியல் நடத்தும், சீமான், நெடுமா, குருமா, வைகோவை நினைவுபடுத்தியது. தின அஞ்சல் அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் விகடனை நினைவுபடுத்தியது.

ஹீரோயின்......
வ்வோக்........

VISA said...

//என்ன செய்வது silukuvarpatti எழுதுகிறவர்களுக்கு தான் ஒடுக்கப்பட்டவனை புரிந்து கொள்ள முடியும் .
//

சிலுக்குவார்பட்டியிலும் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் தானே

VISA said...

//ஜென்டில்மேனை முதன் முதலில் பார்த்தபோது ஏற்பட்ட மசாலா திருப்தி எனக்கு இந்தப் படத்திலும் ஏற்பட்டது.//

ஜென்டில்மேன் மசாலாவோடு இதை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஜென்டில்மேன் ஒரு மசாலா களஞ்சியம். கோ அந்த வகையில் ஊறுகாய் பாக்கெட் தான்.

ஷர்புதீன் said...

மாபிள்ளையை பார்த்துட்டு இத பார்த்தாதான் இந்த படத்தோட அருமை புரியும்
but i agreed with you yuva., because you too in same field! ( me too :-) )

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com said...

உண்மை. வளர்தொழில் பத்திரிக்கையில் முப்பதுரூபா சார் முப்பது ரூபாக்கு கண்முழித்து நாயாய் வேலைபார்த்தேன். இப்போதும் அதே நிலை. பத்திரிக்கை நிறுவனங்களில் இருக்கும் டி.டி.பி ஆப்பரேட்டர்கள் போல பாவப்பட்ட ஜென்மங்களை பார்க்க முடியாது

ஆகாயமனிதன்.. said...

விமர்சனம் அருமை: இந்த படம் தேர்தலுக்கு முன்னாடி வந்திருக்கணும் அப்படின்னு சொன்னவங்க லிஸ்ட்ல நம்ம தளபதி வாரிசும் தான்...அப்புறம் ஏன் படம் லேட்டாச்சுன்னு இப்ப புரியுதா...? journalism அப்படின்னா risk இருக்கத்தான் செய்யும்..இதை நம்ம நடைமுறை வாழ்க்கையோட ஒப்பிட முடியாது..
சுஜாதா விருது பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள் !

yazh said...

Everybody knows it is a hit. But apart from KVs lens, does it truly deserve ?
You answered right.

TMB said...

//ஆனால் பத்திரிகை அலுவலகம் ‘வாஷிங்டன் போஸ்ட்’ ரேஞ்சுக்கு இருக்கிறது & அனேகமாக ஏதோ கால் சென்டரிலோ அல்லது சேட்டிலைட் டிவி அலுவலகத்திலோ படப்பிடிப்பு நடந்திருக்கலாம்//

yes. this is IT company at bangalore whitefiled.(Sigma soft tech park)

கி. சேதுராமன் said...

Thanks yuvakrishna, Compare with politicians and cinema persons, naxalites are good.

ananku said...

மிகைப்படுத்துதல் படைப்பாளியின் கற்பனை வளம் மட்டுமே. தமிழ் சினிமாவில் எல்லாமே மிகை தான். நீங்கள் இந்த துறையில் இருப்பதால் உங்களுக்கு வித்தியாசமாய் இருக்கு. மத்தபடி என்னைமாதிரி வெளியில் இருந்து பார்த்தால் இது மிகையில்லை. கண்ணுக்கு குளிர்ச்சி மட்டுமே. இந்த படம் இயற்கையாய் எடுத்திருந்தால் நீங்க கூட போய் பாக்கமாட்டிங்க. nativity என்ற பெயரில் தங்கர்பச்சான் மாதிரி கொடுமை படுத்தாத வரை சரிதான். either it is positive extreme or negative extreme. nothing like natural in tamil cinema.

Murugavel S said...

ஒரு பத்திரிக்கைகாரன் பார்வை மட்டுமே கொண்ட விமர்சனம், ஆகையால் உங்கள் அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்த்திருக்கிறீர்கள், ஒரு ரசிகனின் பார்வையில் இந்த குறைகள் ஒன்றும் தெரியப்போவதில்லை. ஒரு ரசிகனவும் கொஞ்சம் அலசியிருக்கலாம் , இதை முழுமையான விமர்சனமாக ஏற்றுகொள்ள முடியவில்லை, ஒரு பத்திரிக்கைகாரனின் ஆதங்கமாக மட்டுமே எடுத்து கொள்ள முடியும். கதை ஓட்டத்தோடு ஒட்டாத, வேகத்தை குறைக்கும் பாடல்கள் குறையாக தெரிகின்றன. மற்றபடி படம் நல்ல வேகம். கோடைக்கான நல்ல ஜனரஞ்சக படம். திட்டச்சேரி ச முருகவேல், ஆழ்வார்பேட்டை, சென்னை 18

King Viswa said...

//அதுபோலவே எடிட்டர், ஃபிரண்ட் பேஜை ரெடி பண்ணி வையுங்க. நான் ஒன் அவர்லே மெட்ராஸ் வந்து ஓக்கே பண்ணுறேன் என்று ஃப்ளைட்டில் இருந்து சொல்கிறார். கார்த்திகா மேட்டரை ரெடி செய்வதோடு இல்லாமல், பக்காவாக லே-அவுட்டெல்லாம் கூட செய்து வைக்கிறார். சூப்பர்//

டெக்னிகல் கொஸ்டின். பாஸ்.


கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சித்திரக்கதை - சென்னை சூப்பர் கோமிக்ஸ் - பாண்டி : பாய் ஆப் தி மேட்ச்

ந.ர.செ. ராஜ்குமார் said...

"இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் வாக்களிக்காதீர்", இதுதான் நான் புரிஞ்சுகிட்ட மெசேஜ். தோட்டா சீனிவாச ராவை ஜெயலலிதாவுக்கு பிரகாஷ்ராஜை கருணாநிதிக்கும் உருவகப்படுத்தியிருக்கிறார்கள். கடைசிவரை பிரகாஷ்ராஜை கெட்டவர் போல் காட்டவே இல்லையே. "நீங்க பத்திரிக்கை விக்க ஷேம்ப்பூ சோப்பு இலவசமாக் கொடுக்கலாம் நாங்க ஆட்சியப் பிடிக்க இலவசம் கொடுக்கக் கூடாதோ?" பி.ராஜ் கூறுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. நக்சலைட்கள் எவ்வளவோ தேவலாம்.