அப்படியொன்றும் அழகில்லை!
March 31, 2010
இருநாட்களுக்கு முன்பாக மதியம் இரண்டரை மணியளவில் அண்ணாசாலை வழியாக இருசக்கர வாகனத்தில் தோழரோடு சென்றுக் கொண்டிருந்தேன். டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்துக்கு முன்பாக போக்குவரத்து சிக்கல்.
ஊர்ந்து ஊர்ந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு மாதிரியான கவுச்சி வாடை. காவலர்கள் துண்டு எடுத்து முகத்தை மூடிக்கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒரு ஆயிரம் பேர் சாலையோரம் நின்று வேடிக்கை பார்க்க சாலையோரமாக 'அது' கிடந்தது. ஏதோ கோணி போன்ற சமாச்சாரங்கள் அவசரத்துக்கு மேலே மூடப்பட்டிருக்க அவற்றையும் மீறி சாலையில் கசிந்து கொண்டிருந்தது மனிதக்கூழ்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் சென்னையின் பெரிய பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாராம். 54எச் என்ற மாநகர தொடர்பேருந்தில் அன்று அவர் படிக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்திருக்கிறார். ஓட்டுநர் சடன்பிரேக் போட தவறி கீழே விழுந்தவரின் மீது அப்பேருந்தின் பின்சக்கரம் ஏறி, அவரது தலை கூழாகியிருக்கிறது. பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநரும், நடத்துனரும், பயணிகளும் இறங்கிப் பார்த்திருக்கிறார்கள்.
“செத்துடாம்பா. நீ பஸ்ஸை எடு. அவசரமா போவணும்!” என்று பயணிகள் வற்புறுத்த, 54எச் பிராட்வே நோக்கி சென்றிருக்கிறது. ஒரு நாய் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்தால், எந்த மனோபாவத்தோடு கடந்து செல்வோமோ, அதே மனோபாவத்தோடு 54எச் பயணத்தை தொடர்ந்திருக்கிறது.
இரண்டாவது பத்தியில் வந்த கவுச்சிவாடை எங்கிருந்து வந்தது என்று இன்னேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இன்னும் குறைந்தது ஆறு மாதத்துக்காவது அப்பகுதியை கடக்கும்போதெல்லாம் அதே மனித கவுச்சி வாடையை என் நாசிகள் உணரும். உடல் படபடக்கும். மனம் அச்சத்தால் நடுநடுங்கும்.
வேறு ஒரு இடத்திலும் அதே கவுச்சி வாடையை அன்று மாலையே உணர்ந்தேன். குளிரூட்டப்பட்ட அத்திரையரங்கின் திரையில் அதே மனிதக்கூழை முதல் காட்சியின் முடிவில் கண்டேன். படம் முடியும் வரை வாடை போகவேயில்லை. இரண்டு நாட்களாகிறது இன்னமும் தூக்கத்தில் கூட அவ்வாடை என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.
* - * - * - * - * - *
இயக்குனரின் தொலைக்காட்சிப் பேட்டி பார்த்தேன். ஒருநாள் ரங்கநாதன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த கதை மாந்தர்களைப் பார்த்ததாகவும், “எங்க இருந்துடா இவ்ளோ பேரு வர்றீங்க?” என்று ஆச்சரியப்பட்டு அவர்களை பின் தொடர்ந்து, பலவருட அவதானிப்புகளுக்குப் பிறகும், அதற்குப் பின்னரான உழைப்புக்குப் பின்னரும் இப்படியொரு காவியத்தை படைக்க முடிந்ததாக சொன்னார். பிரமிப்பாக இருந்தது.
ஆனால் படம் பார்த்த இன்னொரு நண்பர் வேறு மாதிரியாக சொல்கிறார். 2007லேயே இதே கதைக்களத்தோடு, ரங்கநாதன் தெருவுக்குப் பதிலாக மும்பையின் போக்குவரத்து சிக்னல் ஒன்றினை வைத்து 'டிராஃபிக் சிக்னல்' என்ற பெயரில் ஒரு படம் வந்திருக்கிறதாம். அப்படத்துக்கு தேசியவிருதுகள் கூட கிடைத்திருக்கிறதாம்.
* - * - * - * - * - *
மனிதக் கவுச்சி வாசனையை மட்டுமன்றி அஞ்சலியின் வியர்வை மற்றும் மல்லிகைப்பூ கலந்த கவர்ச்சி வாசனையையும் என்னால் உணரமுடிந்தது. அதுபோலவே மகேஷின் ஆண்மையான வாசனையும்.
கதைநாயகன் மகேஷ், கதைநாயகி அஞ்சலி இருவருமே அப்பட்டமாக திரையில் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல. கதையின் மற்ற மாந்தர்களிடமும் - ஓரிருவர் தவிர்த்து - நடிப்பு என்பதாக இல்லாமல் இயல்பான வெளிப்பாடு அமைந்திருக்கிறது. குறிப்பாக சூப்பர்வைசராக நடித்திருக்கும் இயக்குனர் வெங்கடேஷ்.
நாயகனின் தோழனாக வரும் டிவி நடிகரின் நடிப்பு கொஞ்சம் நெருடுகிறது. குறிப்பாக ஸ்னேகா விளம்பரக் காட்சிக்காக அவர் செய்யும் அலப்பறைகள் அக்மார்க் மொக்கை. திரைப்படத்தின் நகைச்சுவை பெரும்பாலும் இவரையே சார்ந்திருப்பதால் நகைச்சுவை அவ்வளவாக வேலைக்கு ஆகவில்லை.
‘நான் கடவுள்' படத்தில் நன்கு எடுபட்ட ‘ப்ளாக் ஹ்யூமர்' இப்படத்தில் இயக்குனரின் காலை வாரி விட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அருவருப்பாக கூட இருக்கிறது. குறிப்பாக நாயகனின் முதல் காதல் தொடர்பான காட்சிகள். அந்த காதல் உடைவதற்கு காரணமாக சொல்லப்படும் காரணம். உவ்வே!
* - * - * - * - * - *
படத்தின் முதல் காட்சியே க்ளைமேக்ஸ்தான். ஆடியன்ஸை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்போகும் ஒரு காட்சிக்கு முன்பாக பாட்டு வைத்தே தொலைத்தாக வேண்டும் என்று இயக்குனருக்கு யார் ஆலோசனை சொல்லியிருப்பார்கள் என்று தெரியவில்லை. நியாயமாக கிடைக்க வேண்டிய அதிர்ச்சியின் சதவிகிதம் வெகுவாக குறைகிறது.
அதற்குப் பின்பும் படம் ‘செல்ஃப்' எடுக்கும் என்று நம்பி, நம்பி இடைவேளை வரை ஏமாந்துக்கொண்டே போகிறோம். திராபையாக, மெதுவாக நகரும் காட்சிகள். ஒருவேளை ‘அங்காடித் தெரு' மெகாசீரியலாக வந்திருக்குமானால் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பின்னியிருக்கலாம்.
கலை, ஒளிப்பதிவு, ஒப்பனை என்று இப்படம் முழுக்க தொழில்நுட்ப கலைஞர்களின் ராஜ்ஜியம். இசை மட்டும் படுமோசம். என்ன இருந்து என்ன பயன்? அந்த காலத்து ‘துலாபாரம்' ரேஞ்ச் சோகம் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க விடாமல் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் பெரும் வெற்றி பெற்ற யதார்த்தப் படங்களில் சிலவான சேது, பிதாமகன், காதல், சுப்பிரமணியபுரம் போன்ற படங்களில் இருந்த ‘எண்டெர்டெயினிங் எலிமெண்ட்' சுத்தமாக இல்லாமல் ராவான தார் பாலைவனம் மாதிரி வறண்டுப் போய் கிடக்கிறது அங்காடித்தெரு.
* - * - * - * - * - *
பதினெட்டு பந்துகளில் நாற்பத்தி ஒன்பது ரன்கள் அடித்த ஹர்பஜன்சிங் மாதிரி அடித்து ஆடியிருப்பவர் உரையாடலாசிரியர் ஜெயமோகன். இவரது உரையாடல்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் படம் ஆரம்பித்த முப்பதாவது நிமிடத்திலேயே எழுந்து வீட்டுக்குப் போயிருப்பேன். ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' போன்ற வார்த்தை விளையாட்டுகளை உரையாடல் ஆசிரியர் நிகழ்த்தியிருந்ததால் மட்டுமே ஒப்புக்குச் சப்பாணியாய் ஓரளவு படத்தில் சுவாரஸ்யம் கைகூடுகிறது.
தங்கச்சிக்கு நாய் கடிச்சிடிச்சி. அம்மாவுக்கு மஞ்சக்காமாலை. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். ஆயாவுக்கு பேதி என்று சகலகவலைகளோடு பொழுதுபோக்க திரையரங்குக்கு வரும் அப்பாவித்தமிழனை நிற்கவைத்து சவுக்கால் அடித்திருக்கிறார் இயக்குனர். இப்படம் முப்பது நாட்களை தமிழகத் திரையரங்குகளில் கடந்தால் அதுவே உலக அதிசயம்.
* - * - * - * - * - *
சில வருடங்களுக்கு முன்பாக உதயம் தியேட்டர் அருகில் சாலையில் படுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்து, சரவணா ஸ்டோர் மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த பெண், ரயில்வே லெவல் கிராஸிங்கில் ஏற்பட்ட லாரி விபத்து என்று செய்தித்துணுக்குகளை சேகரித்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
படம் முழுக்க விரவியிருக்கும் சிறுகதைகளை நிறைய பேர் சிலாகிக்கிறார்கள். இதைவிட அருமையான ஓ பாசிட்டிவ் சிறுகதைகளை விக்கிரமன் படங்களில் இருபது வருடங்களாக கண்டு களித்துக் கொண்டிருக்கிறோம்.
அங்காடித்தெரு - அப்படியொன்றும் அழகில்லை! Read more...



























