July 1, 2010

காமிக்ஸ் வடிவில் இலக்கியங்கள்!


செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளில் அரசும், தமிழார்வலர்களும் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிந்த நேரத்தில், சத்தமில்லாமல் செம்மொழி இலக்கியங்களை நடைமுறைத் தமிழுக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது கிழக்கு பதிப்பகம்.

மாநாட்டையொட்டி சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை நாவல் வடிவிலும், குழந்தைகளுக்கான படக்கதை (காமிக்ஸ்) வடிவிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். அனேகமாக தமிழிலக்கியம் இந்த வடிவங்களில் வருவது இதுவே முதன்முறை.

கதைவளம், காவியச்சுவை மற்றும் கவித்துவ எழில் கொண்ட இந்த காப்பியங்களுக்கு உரைநூல்கள் ஏற்கனவே நிறைய உண்டு. உரைநூல்கள் பெரும்பாலும் பண்டித மொழியில், பாமரர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய நடையில் இல்லாததால் இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள் கிழக்கு பதிப்பகத்தார்.

இப்புதிய வடிவங்களால் சங்க இலக்கியத்தின் வீச்சு நீர்த்துப் போய் விடக்கூடிய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வியோடு கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் பா.ராகவனை சந்தித்தோம்.

“உரைநூல்களற்ற சங்க இலக்கியங்கள் மிகவும் குறைவு. அவற்றின் அர்த்தம், கவித்துவம் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உரை எழுதுபவர்கள் மிக அடர்த்தியான மொழியில் எழுதியிருக்கிறார்கள். நம்முடைய சமகால வாசகர்களின் வாசிப்புக்கு இந்த அடர்த்தி இடையூறு செய்யும்.

பாரதியில் தொடங்கிய நவீன உரைநடை, பிற்காலத்தில் பத்திரிகைகளின் வளர்ச்சியால் எளிமை, அழகு, சுவாரஸ்யத்தோடு வளர்ந்தது. எனவே இந்த உரைநடை வசீகரம், பண்டித தமிழ் மற்றும் பழங்கால இலக்கியங்கள் மீதான வாசிப்பு ஆர்வத்தை வாசகர்களிடம் குறைத்துவிட்டது. இதையடுத்து தமிழிலக்கிய வாசிப்பு என்பது ஆர்வம் சார்ந்ததாக மாறிவிட்டது. கல்வி அடிப்படையில் பார்த்தாலும் கூட சில செய்யுள்களையும், இலக்கியத்தின் சில பகுதிகளையும் நாம் கட்டாயத்தின் அடிப்படையில்தான் மாணவப் பருவத்தில் வாசிக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் பண்டிதர்களின் கையில் இருந்த காலம் மலையேறி விட்டது. இப்போது பாமரர் வசம் வந்திருக்கிறது. இந்நிலையில் நம்முடைய பேரிலக்கியங்கள் கடுமை மொழி சார்ந்த பிரச்சினையால் சமகால, எதிர்கால வாசகர்களுக்கு கிட்டாமல் போய்விடக் கூடாது என்று யோசித்தோம். எனவே நாவல் வடிவில் காப்பியங்களை கொண்டுவருவது என்ற திட்டத்துக்கு வந்தோம். இதிகாசங்கள் குழந்தைகளுக்கு படக்கதைகளாக தரப்படுவதைப் போல இலக்கியங்களையும் தந்தால் என்ன என்றொரு கூடுதல் யோசனையும் வந்தது.

ஏற்கனவே நாவல் வடிவம் என்பது வாசிப்பவர்களுக்கு நன்கு பழகிய வடிவமாக இருக்கிறது. சமகாலத் தமிழில் அப்படியே மீண்டும் இலக்கியங்களை புத்தகங்களாக கொண்டு வந்திருக்கிறோம். எதையும் கூட்டவோ, குறைக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. எனவே இலக்கியம் நீர்த்துப் போகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நம் மொழியின் முக்கியத்துவத்தையும், தொன்மையையும் உலகுக்கு உரத்துச் சொல்லும் வகையில் உலக செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மாநாட்டையொட்டி இந்நூல்களை வெளியிடுவதில் கிழக்கு பதிப்பகம் பெருமை கொள்கிறது.

இவற்றை வாசிப்பவர்கள் சுவையுணர்ந்து மேலதிக வாசிப்புக்கு மூலநூல்களை தேடிப்போகக் கூடிய வாசலை நாங்கள் திறந்துவைக்கிறோம்” என்றார்.

வெகுவிரைவில் ‘முத்தொள்ளாயிரம்’ நூலையும் கொண்டுவர இருக்கிறார்கள். சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் எளிமைப்படுத்தி வித்தியாச வடிவங்களில் கொண்டுவரும் முயற்சியில் கிழக்கு பதிப்பகம் முனைப்பாக இருக்கிறது.

8 பின்னூட்டங்கள்:

Rangan Kandaswamy said...

முத்தமிழ் அறிஞர் எழுதிய புத்தகங்களை விட நீங்கள் சொல்லிய பழங்காப்பியங்கள் என்ன வழியில் உடன்பிறப்புகளுக்கு உதவும்?

அடேயப்பா என்ன ஒரு மார்'கட்டிங்'!

வெண்பூ said...

ப‌ட‌க்க‌தையா வ‌ருவ‌து ரொம்ப‌ ந‌ல்ல‌ விச‌ய‌ம் ல‌க்கி.. ரொம்ப‌ ஈஸியா குழ‌ந்தைக‌ளுக்கு ப‌ழ‌க்க‌ முடியும், அதே நேர‌ம், கோவ‌ல‌ன் க‌ண்ண‌கியை விட்டுட்டு மாத‌விட்ட‌ போற‌தை எல்லாம் எப்ப‌டி குழ‌ந்தைக‌ளுக்கு புரிய‌ வைப்போம்னு தெரியலை.

King Viswa said...

இதனைப்பற்றியும், கிழக்கிலிருந்து வந்த மற்ற காமிக்ஸ் பற்றியும் பதிவிட இரண்டு மாதங்களாக நினைத்தும் முடியவில்லை.

விரைவில் பதிவிடுகிறேன். தகவலுக்கு நன்றி.

தமிழ் வெங்கட் said...

சிறுவர்களுக்கு பிடிக்கும்.
ஆனால் இலக்கிய தன்மை மாறாமல்
வந்தால் சிறப்பு

சுவாசிகா said...

இது பாராட்டபடவேண்டிய மிகவும் நல்ல முயற்சி.

மூன்று நாவல்களையுன் வாங்கி விட்டேன்.

பள்ளி காலத்தில் பரிட்சைக்காக டப்பா அடித்ததோடு சரி.

சிலப்பதிகாரம் சினிமாவாக வந்ததால் பரிச்சயம்.

மணிமேகலையையும், சீவக சிந்தாமணி கதை தெரிந்து கொண்டது இப்பொழுதுதான்..

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

VISA said...

//சிலப்பதிகாரம் சினிமாவாக வந்ததால் பரிச்சயம். //

தமன்னா கண்ணகியாக நடித்தால் உசிதம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கிழக்கின் புதிய முயற்சிகள் சிறப்பானவை, பாராட்டுக்குரியவை. தொடரட்டும் பணி.

Anonymous said...

good work.. every one can read and kids will love read with interest ..MK pl recommend this book to school students !!

VS Balajee