சென்னை 600015

March 12, 2010


உலகமே ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த வருடாந்திர திருவிழா ஐபிஎல் ஆரம்பமாகி விட்டது. ஐபிஎல்-லுக்கு இருக்கும் இதே எதிர்ப்பார்ப்பு சென்னையில் வேறொரு டோர்ணமெண்டுக்கு உண்டு. அது தளபதி கோப்பை. மார்ச் 1 தளபதியின் பிறந்தநாள். அதைத் தொடர்ந்து நடத்தப்படும் போட்டியில் சுமார் 2000 அணிகள் வரை கலந்துக் கொள்ளும்.

கிட்டத்தட்ட 25000 வீரர்கள் விளையாடும் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் போட்டி இது. அதாவது அடுத்த தேர்தலில் திமுகவுக்கு பணியாற்றப் போகும் 25000 இளைஞர்கள் என்றும் சொல்லலாம். தேர்தலுக்காக இளைஞர்களை ஆள் பிடிக்கும் இந்தப் பாணியை வெற்றிகரமாக 2000களில் தென்மாவட்டங்களில் கையாண்டவர் நயினார் நாகேந்திரன்.

சீரியஸ் கிரிக்கெட் அல்ல என்பதால் டென்னிஸ் பால்தான். சென்னை 600028 படத்தின் கிளைமேக்ஸில் உணர்ந்திருப்பீர்களே ஒரு டென்ஷன்? அதே டென்ஷன் தளபதி கோப்பை போட்டிகளிலும் அட்சரம் பிசகாமல் இருக்கும். பின்னே? 50, 100 என்று பெட் கட்டி விளையாடிக் கொண்டிருக்கும் லோக்கல் டீம்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் பரிசு என்றால் கசக்கவா செய்யும்? சொக்கா சொக்காவென்று சொக்கிப் போய் மொய்க்கிறார்கள் இளைஞர்கள். தளபதி படம் போட்ட டீஷர்ட் ஃப்ரீ.

முன்பெல்லாம் கோல்டன் ஸ்போர்ட்ஸ் க்ளப் நடத்தும் தளபதி கோப்பை மின்னொளி கிரிக்கெட் போட்டி என்று விளம்பரப்படுத்தப் படும். இப்போது டைரக்டாகவே தென்சென்னை திமுக இளைஞரணி நடத்தும் போட்டி என்று விளம்பரப்படுத்தப் படுகிறது. இந்த சீஸனுக்கு சென்னையில் மூன்று மைதானங்களில் தரமான மின்னொளி ஏற்பாட்டில் பரபரப்பாக நடந்து வருகிறது. அடையார், டிரஸ்ட்புரம், சைதாப்பேட்டை.

எட்டு ஓவர் போட்டிகள். சராசரியாக 60, 70 அடித்துவிட்டாலே நல்ல ஸ்கோர். பவுலர்களுக்கு இங்கே மதிப்பேயில்லை. சிக்ஸர்களும், ஃபோர்களுமாக விளாசும் சச்சின்களும், தோனிகளும்தான் ஹீரோக்கள். பங்கேற்கும் வீரர்களில் 99.99 சதவிகிதம் பேர் கேஸுவல் ப்ளேயர்கள் என்பதால் ஏகப்பட்ட கேட்ச் மிஸ் ஆகிக்கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு பத்து போட்டிகள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் அணிகள் என்பதால் இது மிகப்பெரிய கடினமான பிராசஸ் கொண்ட விஷயம். சென்னையில் இருப்பவர்கள் டைம்பாஸுக்காக மாலை வேளைகளில் இந்த கிரவுண்டுகளுக்கு போகலாம்.

ஒருபக்கம் மரத்தால் கட்டப்பட்ட கேலரி இருக்கும். 100 பேர் வரை அமர்ந்துப் பார்க்கலாம். கமெண்ட்ரி பாக்ஸ் என்ற பெயரில் ஒரு மேடை இருக்கும். யாராவது கரைவேட்டி எப்போதும் நிரந்தரமாக அமர்ந்திருப்பார். கமெண்ட்ரிகள் சுவாரஸ்யம்.

“எங்கள் நடுவர்கள் துல்லியமானவர்கள் என்பதை கேள்விப்பட்டு ஐபிஎல் நிர்வாகம் தங்களது போட்டிக்கு இவர்களை அழைத்திருக்கிறது. நடுவர்களை இழந்துவிடுவோமோ என்று வருந்திக் கொண்டிருக்கிறோம்”

“153வது வட்டச் செயலாளர் உங்களோடு போட்டியை ரசித்துக் கொண்டிருக்கிறார். அகலப்பந்து வீசாமல் ஒழுங்காக பந்து வீசப் பாருங்கள் பவுலர்களே!”

“இது தளபதி கோப்பை. எனவே நடுவரிடம் வாக்குவாதம் செய்யும் வீரர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப் படுவார்கள்”

“அட்டகாசமான ஆர்ர்ர்ரூ... ராஜேஷ் அடித்த அடியில் பந்து தொலைந்துவிடுமோ என்று அஞ்சிவிட்டோம்”

- இந்த ரேஞ்சில்தான் வர்ணனை இருக்கும். வர்ணனையாளரின் தொல்லை ஒருபுறம் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்க, பார்வையாளர்கள் வேறு தங்கள் மேதமையை மறுபுறம் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

“அவன் லைன் அண்ட் லெந்தா போட்டிருக்கணும். ஃபுல் டாஸ் போட்டதாலதான் சிக்ஸ் அடிச்சான். ஸ்ட்ரெயிட்டா ஸ்லோ பால் போட்டா கூட இவனுக்கு ஆடத் தெரியாது” எனுமளவில் நுணுக்கங்களை கரைத்துக் குடித்து வாந்தியெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இடையிடையே மைதானத்தின் துப்புரவுப் பணியாளர் டவுசர் பாண்டிக்கு வேறு நன்றி சொல்லி கொண்டிருப்பார் வர்ணனையாளர். டவுசர் பாண்டியோ தன்னுடைய பெயர் மைக்கில் அறிவிக்கப்படும் பிரக்ஞையேயின்றி ஒரு கையில் துடப்பத்தோடும், மறுகையில் காஜாபீடியோடும் சுற்றிக் கொண்டிருப்பார்.

பார்வையாளர்களின் பசியாற்ற பிரெட் ஆம்லெட் போட்டுத் தரும் உணவு விடுதி ஒன்றும் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிகரெட், பான்பராக் வாங்க சைதாப்பேட்டை மைதானத்துக்கு அருகில் கடையேயில்லை. எனவே சில சிறுவர்கள் வெளி மார்க்கெட்டில் வாங்கிவந்து பிளாக்கில் கொள்ளை ரேட்டுக்கு விற்கிறார்கள்.

போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அணிகளின் பெயர்களும் வித்தியாசமானவை. இம்பார்ட்டண்ட் லெவன் ஸ்டார்ஸ், ஸ்பேரோஸ், லெவன் டெர்மினேட்டர்ஸ், தந்தை பெரியார் சிசி, ஏவிபி ஆசைத்தம்பி சிசி என்று வரைமுறையே இல்லாமல் பெயர் வைத்திருப்பார்கள்.

தினமும் திமுக விஐபி யாராவது மேட்ச் பார்க்க ஆஜராகிவிடுவதுண்டு. தென்சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகன் அடிக்கடி வந்துவிடுவார். அவர் வரும்போதெல்லாம் வர்ணனையாளருக்கு உதறல்தான். “அண்ணன் மாவட்டம் பெண்ணாகரம் தேர்தல் பணி பிஸிகளுக்கு இடையேயும் வீரர்களை ஊக்கப்படுத்த இங்கே வந்திருக்கிறார். அண்ணன் மாவட்டத்தை வரவேற்கிறோம்” என்று உச்சஸ்தாயியில் கத்துவார்.

அண்ணன் மாவட்டத்தின் மகன் ராஜாவும் அவ்வப்போது வருவதுண்டு. அவர் பார்க்கும்போது வெற்றியடையும் அணிக்கு ஆயிரம் ரூபாய் இன்ஸ்டண்ட் பரிசும் வழங்குவதுண்டு. வட்ட மற்றும் சதுரச் செயலாளர்களும் கூட தங்கள் வட்ட டீம்கள் விளையாடும்போது 500, 1000 என்று அள்ளிவிடுவதுண்டு. பசங்களுக்கு பீர் செலவுக்கு ஆச்சி.

கடந்த வாரத்தில் நடந்த ஒரு போட்டியில் இதுவரை இப்போட்டி வரலாற்றில் நடைபெறாத அதிசயம் ஒன்று நடந்தது. குரோம்பேட்டை பகுதியைச் சார்ந்த அணி ஒன்று எதிரணியைப் போட்டு புரட்டியெடுத்து விட்டது. 8 ஓவரில் 128 ரன். அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான பெர்னார்ட் 15 சிக்ஸர், 4 நான்கு என்று விளாசி 109 ரன்கள் எடுத்திருந்தார். தளபதி கோப்பையில் அணியின் ஒட்டுமொத்த ஸ்கோர் என்ற அடிப்படையிலும், தனிமனித செஞ்சுரி என்ற அடிப்படையிலும் இது புதிய சாதனை.

தோற்றுப் போகும் அணியினர் வெறுத்துப் போய் தங்கள் டீஷர்ட்டுகளை தூக்கியெறிந்து விட்டுச் செல்லுவதுண்டு. ஏரியா பொடிசுகள் இதனாலேயே எந்த டீம் தோற்கிறதோ அந்த டீமிடம் சென்று டீஷர்ட்களை தங்களுக்கென்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

சுமார் ஒருமாதத்துக்கும் மேலாக நடைபெறப் போகும் இப்போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசினை அளிக்க தளபதியை நேரம் கேட்டிருக்கிறாராம் மாவட்டம். தளபதி கையால் பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டம் எந்த அணிக்கோ?

7 பின்னூட்டங்கள்:

Mohan 6:27 PM, March 12, 2010  

ஊரே ஐ.பி.எல் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,நீங்கள் கொடுத்திருக்கும் இந்தத் தகவல்கள் இரசிக்கும்படி இருக்கின்றன.

Nataraj 9:26 PM, March 12, 2010  

Good one :)

Anonymous 10:27 PM, March 12, 2010  

17 lakh hits. congrats lucky.

aniyayam 5:49 AM, March 13, 2010  

நக்கலா..........

Anonymous 9:57 AM, March 13, 2010  

Photo international cricket...article local cricket (team).. :-)
-SweetVoice

காவேரி கணேஷ் 11:55 AM, March 13, 2010  

இந்த கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு கலைஞர் தொலைக்காட்சியில் எப்படி ஜடியா?

varadharajan 10:30 AM, March 18, 2010  

Super appu

Back to TOP