மனநோயோடு மல்யுத்தம்!

December 23, 2009


அகிலேஷ்வர் சகாய். வயது 50. டெல்லிக்கு அருகில் குர்கானில் செயல்படும் ஒரு பெரிய நிறுவனத்தின் போக்குவரத்து தொடர்பான பிரிவின் இயக்குனர். நிறுவனத்தின் மிக முக்கியமான கை. அவருடைய ஒவ்வொரு நிமிடமும் பல்லாயிரம் ரூபாய்கள் மதிப்பு வாய்ந்தது. எப்போது பார்த்தாலும் பிசினஸ் மீட்டிங். விமானத்தில் பறந்துக்கொண்டே இருப்பார். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அகிலேஷ்வர் ஒரு செயின் ஸ்மோக்கர். ஆறாவது விரலாய் சிகரெட் புகைந்துக் கொண்டேயிருக்கும். சிகரெட்டின் தீமையை நன்கு அறிந்திருந்தும், “நான் ஓய்வே இல்லாதவன். நொடிக்கு நான்கு முறை கோபப்படும் மனிதன். இதனால்தான் சிகரெட் பழக்கம்” என்று புன்னகைக்கிறார். ஏழு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார். தீவிரமான மனநோயோடு ஒரு நிறுவனத்தின் உயர்பதவியில் பணிபுரிபவர், அனேகமாக இவர் ஒருவர் மட்டுமாகதான் இருப்பார்.

அடுத்த ஒரு பத்தியினை கொஞ்சம் லேசாக கற்பனை செய்துப் பாருங்கள்.

உங்களை நாளை காலை தன்னோடு வாக்கிங் அழைத்துச் செல்ல பிரதமர் மன்மோகன் சிங் அழைத்திருக்கிறார். மறுநாள் மதிய உணவு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன். அதற்கு அடுத்த நாள் மாலையில் பிரான்ஸ் அதிபர் சர்கோஸியுடன் பாரிஸ் நகரை வலம் வரவேண்டும். இடையில் இங்கிலாந்து ராணி வேறு சந்திப்புக்கு நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறார். உலகநாடுகளின் அதிபர்களும், தலைவர்களும் உங்களை சந்திக்க, பேச, பழக ஒற்றைக்காலால் தவம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

புன்னகையோடு படித்திருப்பீர்கள். கற்பனைக்கு நன்றாகத்தான் இருக்கிறது, இதெல்லாம் நடக்கிற காரியமா என்று யதார்த்தமாக யோசித்துவிட்டு, அடுத்தப் பத்திக்கு நகர்ந்து விட்டீர்கள் இல்லையா?

அகிலேஷ்வருக்கு இந்த இடத்தில் தான் பிரச்சினை. இதுமாதிரியான அதீத கற்பனை அவரது உள்ளத்தில் தோன்றும். அந்த கற்பனை உண்மையென்று நினைத்து, அது தொடர்பான முயற்சிகளில் மூழ்கிவிடுவார். அதாவது நிஜமாகவே நாளை காலை மன்மோகன் சிங்கோடு வாக்கிங் போகவேண்டுமென்று நினைத்துக் கொண்டு, டிராவல் ஏஜென்ஸியில் டெல்லிக்கு பிளைட் டிக்கெட் புக் செய்துவிடுவார். டெல்லியில் இருந்து வாஷிங்டனுக்கு... அங்கிருந்து பாரிஸுக்கு...

பின்னர் இதெல்லாம் நடக்காதபோது அவருக்கு ஏற்படும் மனச்சோர்வுக்கு எல்லையே இருக்காது.

நினைத்துப் பார்க்கவே விபரீதமாக இல்லை?

ஒருமுறை இப்படித்தான். திடீரென்று தன்னுடைய வங்கியின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கு தொலைபேசினார் அகிலேஷ்வர். தனக்கு உடனடியாக மூன்று லட்ச ரூபாய் லோன் வேண்டும் என்று கேட்டு வாங்கினார். அடுத்த நான்கு நாட்களிலேயே மூன்று லட்ச ரூபாயை எதற்காக செலவழிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் செலவழித்து விட்டார். என்னென்ன செலவழித்தோம் என்று அவருக்கு நினைவேயில்லை. அதன் பின்னர் அவர் தனது மணிபர்ஸில் ஐம்பது ரூபாய்க்கு மேல் வைத்துக் கொள்வதே இல்லை.

இது எந்தமாதிரியான பிரச்சினை? ஸ்க்ஸோப்ரீனியா மாதிரி வாயில் நுழையாத எண்ணற்ற மனநோய்களில் ஒன்று பிபோலர் டிஸார்டர் (Bipolar Disorder). இந்த நோய் இருப்பவர் பணித்திறன் குன்றியிருப்பார். குடிக்காமலேயே குடித்தவரைப் போல நடந்து கொள்வார். அல்லது ஏடாகூடாமாக சிந்திப்பார். ஆரம்பத்திலேயே தகுந்த மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறாவிட்டால், மிக மோசமான விளைவுகளுக்கு இந்நோய் இட்டுச்செல்லும்.

இயல்பான மனநிலையை மாற்றியமைப்பது தான் இந்நோயின் மோசமான ஒரு தாக்குதலாக சொல்லலாம். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் மிகவும் சோகமாக மனம் உணரும். தூங்க வேண்டும் என்ற மனநிலை வரவே வராது (Insomnia). தூக்கமின்மையால் தன்னம்பிக்கை குறையும். நாளுக்கு நாள் இனம் தெரியாத குற்றவுணர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்லும். இறுதியாக தற்கொலை எண்ணம் வலுப்பெறும்.

அகிலேஷ்வர் சகாய்க்கு ஏன் இந்நோய் வந்தது என்று குறிப்பாகச் சொல்லமுடியவில்லை. அவருடைய கடந்தகால பணிகளும் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

தன்னுடைய இருபதாவது வயதில் சகாய், டெலிகிராப் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இரவுகளில் பணி. பகலில் படிப்பு. படிப்பு முடிந்தவுடன் தேசிய வங்கி ஒன்றில் பணியாற்றினார். 1991லிருந்து 1997 வரை கொங்கன் ரயில்வேக்காக அவர் பணியாற்ற வேண்டியிருந்தது. பணப்பரிமாற்றத்துக்கு பொறுப்பாக இருந்ததால் ஒரு நாளைக்கு பதினெட்டு முதல் இருபது மணி நேரங்கள் வரை அவர் உறக்கமின்றி பணியாற்ற வேண்டியிருந்தது. பணியாற்றிய நிறுவனங்களில் எல்லாம் வேலை பார்ப்பதில் இவர் சூரப்புலி என்றே பெயர் வாங்கினார்.

மிகச்சரியாக இதே காலக்கட்டத்தில் தான் அவருக்கு மனநோய் உருவாகியிருக்கும் என்று தெரிகிறது. வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தில் இணைந்திருந்தார். வேலை பார்ப்பது அவருக்கு கசந்த காலக்கட்டம் இது. இவரது வாழ்க்கையை மனநோய் கொஞ்சம் கொஞ்சமாக தின்றுக் கொண்டிருந்தது. தூக்கம் என்பதே அரிதாகிவிட்டது. சோம்பல், சோர்வு. வாழ்வதே நரகம்.

நண்பர்கள் சிலரின் ஆலோசனையின் பேரில் மனநல மருத்துவர்களை தொடர்பு கொண்டார். மருத்துவர்கள் உதவியால் தனக்கு பிபோலர் டிஸார்டர் இருப்பதை கண்டுகொண்டார். இந்நோய் மூளையின் செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கிறது. நம்மில் நூற்றில் ஒருவர் கடுமையாகவும், நான்கு பேர் மிதமாகவும் இதே மனநோயால் பாதிக்கப்படுகிறோம். இந்நோயின் தாக்கத்தை குறைக்க வீரியமான மருந்துகள் தேவைப்படும்.

இந்தியாவில் பெரிய நிறுவனங்களில் உயர்பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மட்டத்தில், அனேகமாக இந்நோய் கண்டறியப்பட்டிருப்பது சகாய் விஷயத்தில் தான். பலருக்கும் இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பெரிய பெயருடன் இருப்பவர்கள் மனநோய்க்கு மருத்துவம் பார்ப்பதை வெளிப்படையாக சொல்ல விரும்புவதில்லை. தமக்கு மனநோய் இருப்பதாக மருத்துவரால் சொல்லப்பட்டாலும், அதை ஒத்துக்கொள்ள பெரிய மனிதர்களின் ஈகோ இடம் தருவதில்லை என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளில் ஐந்து முதல் பத்து சதவிகிதம் பேருக்கு மனச்சோர்வு நோய் இருப்பதாகவும், அவர்களில் 90 சதவிகிதம் பேர், இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போது சகாய் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர் வினாயக் சாட்டர்ஜி, இவரது மனநோய் குறித்து தெரிந்தே பணிக்கு சேர்த்தார். சகாயை இந்நிறுவனம் குழந்தை மாதிரி பார்த்துக் கொள்கிறது என்று சொன்னால் மிகையாகவே தெரியும். ஆனால் அப்படித்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.

“அவர் அடிக்கடி கோபப்படுவார். திடீரென விடுப்பு எடுப்பார். அதெல்லாம் எங்களுக்கு பிரச்சினையில்லை. அலுவலகத்தைப் பொறுத்தவரை அவர் வைரம். வைரத்தை யாராவது வேண்டாமென்று சொல்லுவார்களா?” என்று சொல்லி சிரிக்கிறார்கள் சக அலுவலர்கள். சகாய் வேலை பார்க்கிறாரா என்பதைவிட ஒழுங்காக தூங்குகிறாரா என்பதை உறுதி செய்துக் கொள்கிறது அவரது நிறுவனம். ஏனெனில் உறக்கம்தான் பல பிரச்சினைகளுக்கும் தீர்வான ஒரே மருந்து.

“இப்போது எனக்கு ஏற்பட்டிருப்பது தற்காலிக நிவாரணம். எவ்வளவு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று தெரியாது. வாரத்தில் ஏதாவது ஒருநாள் மறந்துபோய், நான் மருந்து உட்கொள்ளாவிட்டாலும் கூட பழைய நிலைக்கு போய்விடக் கூடிய ஆபத்து எப்போதும் இருக்கிறது. மனநோயை தனிமனிதனாக வெல்வது என்பது சாத்தியமற்றது. சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் யாரும், எதையும் வென்று விடமுடியாது!” என்று பணிவாக சொல்கிறார் சகாய்.


நிறுவனங்களின் கடமை!

இன்றைய பரபரப்பான சூழலில் நம்மில் பலருக்கும், நாம் அறியாமலேயே மனம் தொடர்பான நோய்கள் இருக்கக்கூடும். உடல் தொடர்பான நோய்களைப் போன்று வெளிப்படையான அறிகுறிகள் தென்படாததால் நாம் இயல்பாக இருப்பதாகவே நம்பி தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை.

குறிப்பாக விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பத்திரிகையாளர்கள், பி.பி.ஓ பணியாளர்கள் போன்றவர்கள் காலக்கெடுவுக்குள் (Deadline) பணியை முடிக்க, தூக்கத்தைத் துறந்து பணியாற்றுபவர்களுக்கு மனச்சோர்வு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் பணித்திறன் குறைந்து இவர்களுக்கு அலுவலகத்திலும் கெட்ட பெயர். பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இல்லாது, அலுவலக டென்ஷனை வீட்டிலும் ‘வள்’ளென்று காட்டுவார்கள். சில நாட்களிலேயே சமூகத்தோடு ஒன்றமுடியாமல் தங்களை தாங்களே தனித்துக் கொள்வார்கள்.

தங்கள் ஊழியர்கள் ஒழுங்காக உணவு உட்கொள்கிறார்களா என்று கேண்டீனெல்லாம் அமைத்து அக்கறையோடு பார்த்துக் கொள்ளும் நிறுவனங்கள், அவர்கள் உறங்கினார்களா, பணிச்சுமை ஊழியர்களுக்குள் சமமாக பகிர்ந்துக் கொள்ளப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

(நன்றி : புதிய தலைமுறை)

6 பின்னூட்டங்கள்:

தர்ஷன் 3:14 PM, December 23, 2009  

பகற் கனவுகள் மன அழுத்தத்தை குறைக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இது விபரீதமாக அல்லவா இருக்கிறது. எனக்கும் ஒரு காலத்தில் பகற் கனவுகள் இருந்தன. எல்லாம் காதல்சம்பந்தப்பட்டது

சுவாசிகா 5:28 PM, December 23, 2009  

நிறுவனங்களின் கடமை இதில் முக்கியமானது..

ஆனால் employeesஐ ஒரு இயந்திரமாக பார்க்கும் பெறும்பாலான பெரிய நிறுவனங்கள் இதில் கவனம் காட்டுமா என்பது சந்தேகமே..அவர்களை பொறுத்த வரை இந்த இயந்திரம் இல்லேன்னா இன்னொரு இயந்திரம்..

அவர் தற்போது பணிபுரியும் நிறுவனத்திற்கு என் பாராட்டும் நன்றியும்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

Dinesh 6:03 PM, December 23, 2009  

Nalla irundhadhu... aana ippo ellam neenga yen eludhuradhu illai...

ரவிபிரகாஷ் 7:40 PM, December 23, 2009  

என்ன யுவகிருஷ்ணா இது, ‘கஜினி’யைவிட மோசமா இருக்கே? இப்படி ஒரு வாழ்க்கையைக் கற்பனை செஞ்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு!

S. Krishnamoorthy 11:27 AM, December 26, 2009  

சரியான சமயத்தில் எழுதப்பட்டுள்ள பதிவு. நாம் நடையை மறந்து விட்டோம். ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். எதிலும் வேகம் - அசுர வேகம். டென்ஷன் நம்மைத் துரத்திக்கொண்டிருக்கிறது.
எச்சரிக்கை செய்துள்ளீர்கள். இளைஞர்கள் அனைவரும் இந்தப் பதிவைக் கட்டாயம் படித்துச் சிந்திக்கவேண்டும்.
நன்றி பல.
கிருஷ்ணமூர்த்தி

சிவாஜி 3:25 PM, December 29, 2009  

உண்மை தான்... இதைப் படித்ததும் எனக்குள்ளும் மனச்சோர்வு இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. சரியான நேரத்தில், எச்சரிக்கை மணி!

அன்புடன்,
சிவாஜி
http://greenworldindia.org

Back to TOP