பன்றிக் காய்ச்சல் - ஊடகங்கள்!

August 12, 2009

பாரதிக்கு வயது 20. கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடந்தது. கணவர் மாடசாமி. மடிப்பாக்கத்தில் மளிகைக்கடை வைத்திருக்கிறார். ஆடிமாசத்துக்காக தாய்வீட்டுக்கு வந்த பாரதிக்கு திடீர் காய்ச்சல். உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை. சீரியஸான நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பன்றிக்காய்ச்சலுக்கான சோதனை அவருக்கு செய்யப்பட்டது. சோதனை முடிவுகளுக்கு முன்பே பாரதி பரிதாபமாக மரித்துப் போனார்.

மடிப்பாக்கம் பகுதியில் தீயென பரவியது பாரதியின் மரணச்செய்தி. ஏற்கனவே கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களிலும், வார இதழ்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் பார்த்துப் பதறிய பன்றிக்காய்ச்சல் தங்கள் ஊருக்கும் வந்துவிட்டதோ என்று அஞ்சி நடுங்கினார்கள். இடையில் வேளச்சேரியில் ஒரு குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலியானது நாளிதழ்களின் தலைப்புச் செய்தியானது.

தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினார்கள். மெடிக்கல் ஷாப்களில் விற்கப்படும் ‘மாஸ்க்’ வாங்கி அணிய ஆரம்பித்தார்கள். இன்று மடிப்பாக்கம், வேளச்சேரி சுற்றுவட்டாரங்களில் எந்த மெடிக்கல் ஷாப்பிலும் ‘மாஸ்க்’ ஸ்டாக் இல்லை. தென்சென்னையில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ”எதுக்கும் உஷாரா இருந்தோப்பமே?” என்று கிங் இன்ஸ்ட்டிட்யூடில் வரிசையில் நின்று பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனையை செய்துக் கொள்கிறார்கள். மொத்தமாக பரிசோதனைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் பரிசோதகர்களே திணறிப் போயிருக்கிறார்கள்.

பாரதிக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் இப்போது வெளிவந்திருக்கிறது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் இல்லையாம்.

* - * - * - * - * - * - * - * - *

பன்றிக்காய்ச்சல் காரணமாக ஊரே பிணக்காடாகி விட்டது போன்ற பீதியை ஊடகங்கள் கிளப்பி வருகின்றன. நூற்றி பத்து கோடி பேர் வசிக்கும் நாட்டில் ஆயிரத்துக்கு ஏழு பேர் இறப்பதும், புதியதாக இருபத்து மூன்று பேர் பிறப்பதும் இயல்பாக நடந்து வரும் விஷயம். ஆயிரத்துக்கு ஏழு பேர் என்றால் நூற்றி பத்து கோடிக்கு எத்தனை பேர் இறக்கிறார்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். மரணங்களும், பிறப்புகளும் நம் நாட்டுக்கு புதியதல்ல.

சுனாமி பேரிடரின் போது நம் பத்திரிகைகள் நடந்துகொண்ட விதம் உலகுக்கே முன்னுதாரணம். ஆனால் இப்போது பன்றிக்காய்ச்சல் போன்ற அசாதாரண சூழலில் நடக்கும் ஒவ்வொரு சாதாரண மரணமும் கூட ஊடகங்களால் பெரிதுப்படுத்தப்பட்டு உயிரோடு இருப்பவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம்தான் மேலே கண்ட பாரதியின் மரணம். மரணம் கொடுமையானதுதான். ஒவ்வொரு மரணத்தின் போதும் அவர்களது குடும்பத்தார் கதறியழுவது சகஜமாக நடப்பதுதான். இதையெல்லாம் படம் பிடித்து டிவியில் போட்டு, பத்திரிகைகளில் படமாக்கி, பல கோடி பேரை அச்சமடையச் செய்வது நம் ஊடகங்களின் இன்றைய டிரெண்ட் ஆக இருக்கிறது. ’மும்பை 26/11’ சம்பவத்தின் போதே நம் ஊடகங்களின் யோக்கியதை சந்தி சிரித்தது.

போலியோ மருந்து போடப்படும் தினங்களிலும் இதுபோலவே பொறுப்பின்றி ஊடகங்கள் நடந்துகொள்வதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு அந்தச் சொட்டுமருந்து போடப்படாமல் போவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தினமும் தமிழகத்தில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து குழந்தைகளாவது மரித்துப் போகிறது. போலியோ சொட்டு மருந்து போடப்படும் தினத்திலும் இது தவிர்க்க இயலாதது. ஆனால் சொட்டு மருந்து போட்டுக் கொண்டதால் நான்கு குழந்தைகள் பலி என்று டிவியில் ஸ்க்ரோல் ஓட்டுவதாலும், மாலைச் செய்திகளில் குழந்தையின் பெற்றோர் கதறியழும் படத்தை அச்சிடுவதாலும் ஏற்படும் விளைவுகள் என்ன?

மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது அவசியமென்றாலும், வீணான வதந்திகளையும் இலவசமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பற்றத் தனத்தையும் நம் ஊடகங்கள் செய்துவருகிறது. இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பணியாற்றி, பாடுபட்டு வரும் அரசுக்கும், அரசின் ஊழியர்களுக்கும் இவை சிக்கலையும், சோர்வையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும்.

குறிப்பாக, பிராந்திய மொழி ஊடகங்களிடமே இந்த ’பரபரப்பு’ தொற்றுநோய் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. தேசிய அளவில் செயல்படும் ஆங்கில ஊடகங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை. நிபுணர்களின் கருத்துகள், தவிர்க்கும் முறைகள் என்று கொஞ்சம் ஆழமாக செய்திகளை வெளியிடுகிறார்கள். இன்று காலை ஒரு தமிழ் நாளிதழில் பன்றிக்காய்ச்சல் குறித்து ஒரு ஜோசியர் சொன்னதை கட்டம் கட்டி வெளியிடப்பட்டதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டேன். விரோதி வருடம் பிறந்தபோதே, அவர் ஒரு உபன்யாசத்தில் இதை கோட்டிட்டுக் காட்டியிருந்தாராம். பன்றிக்காய்ச்சல் வருவதைத் தடுக்க சிவ வழிபாடு செய்யவேண்டுமாம். சிவன் கோயிலில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடப்போகிறார்கள். யாராவது பன்றிக்காய்ச்சல் வந்தவரும் அந்தக் கூட்டத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றால், முடிந்தது ஜோலி.

உலகளவில் ஊடகங்களிடம் இரண்டு பாணி உண்டு. ஒன்று பிபிசி பாணி. மற்றொன்று சி.என்.என் பாணி. நடந்ததை நடந்ததாக சொல்லுவது பிபிசி பாணி. நடந்த விஷயங்களை வைத்து என்னவெல்லாம் இனி நடக்கும் என்று யூகித்து செய்து வெளியிட்டு, சென்சேஷனல் ஆக்குவது சி.என்.என். பாணி. பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் பரவும் காலங்களிலும், பேரிடர் சமயங்களில் மட்டுமாவது பிபிசி பாணியை நம் ஊடகங்கள் பாவித்தால் தேவலை.

24 பின்னூட்டங்கள்:

jaisankar jaganathan 1:27 PM, August 12, 2009  

ulagam azhiya poguthu . pandrikku kaichal varuthamaey

ராஜன் 1:52 PM, August 12, 2009  

me the first...

comment next....

ஜோ/Joe 2:05 PM, August 12, 2009  

மிக அவசியமான பதிவு!

என். உலகநாதன் 2:30 PM, August 12, 2009  

யுவா,

அருமையான கட்டுரை.

தகுந்த நேரத்தில் பதிந்தற்கு நன்றி.

Anonymous 2:41 PM, August 12, 2009  

குமுதம் ரிப்போர்ட்டரில்
நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்
என்பதை மறந்து விட்டுப் பேசுகிறீர்கள்.
இருந்தாலும் உங்களின் இந்தக் கட்டுரை
அளவில் ஓரளவு நியாயம் இருக்கவே
செய்கிறது.
நன்றி

சித்து 3:11 PM, August 12, 2009  

சரியாச் சொனீங்க யுவக்கிருஷ்ணா இதுலயும் பணம் பண்ண முயற்சி பண்றாங்க.

Truth 3:34 PM, August 12, 2009  

யுவா,

உங்கள் பதிவுகளில் இது தான் சிறந்தது. நல்லா எழுதியிருக்கீங்க சார். hats off

பரிசல்காரன் 3:44 PM, August 12, 2009  

மிக ஆழமான அலசல் லக்கி. ஊடகங்களின் தான்தோன்றித்தனமான போக்கு கண்டிக்கத்தக்கது.

நீங்கள் குறிப்பிட்டிருந்த ஜோசிய பேப்பர் கட்டிங்கை எங்கள் ஆஃபீஸ் நோட்டீஸ் போர்டில் காமெடி கார்னரில் இன்றுதான் ஒட்டினேன்!

அக்னி பார்வை 3:50 PM, August 12, 2009  

முதலில் இந்த மாதிரியான நேரத்தில் இறந்தவர்களை படம் பிடித்து சென்சேஷனல் ஆக்குவதை விட,எந்த மாதிரியான தற்காப்பு நடவடிக்கைகளும், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள பட வேண்டும் என்பதை தான் பொருப்பான ஒரு மீடியா மக்களௌக்கு சொல்ல வேண்டும்.... இந்த மாதிரியான தொற்று வியாதிகளின் காலத்தில் ஒரளவு பயம் இருப்பது ஓரளவுக்கு மேல அது அவர்கள் வாழ்க்கையை பாதிக்கும், எனக்கு தெரிந்து மக்களுக்கு தேவை பயம் அல்ல நேயை தடுக்கும் வழிமுறைகளும், அதை பற்றிய அடிப்படை அறிவும் தான்... பதிவுக்கு நன்றி

பிரபாகர் 3:58 PM, August 12, 2009  

குருஜி,

மிகச்சரியாக, சரியான சமயத்தில் பொறுப்போடு பதித்திருக்கிறீர்கள். இங்கு சிங்கப்பூரிலும் தான் பன்றி காய்ச்சல் இருக்கிறது. இந்திய ஊடகங்கள் மாதிரி வதந்திகளை பரப்பாமல் யாவும் சுமூகமாக செல்கிறது. போட்டி மனப்பான்மையில் பணத்திற்காக படு பாதக செயலில் விபச்சாரத்தையும் விட மிகக் கேவலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன. கடுமையான வார்த்தைக்கு மன்னிக்கவும்.

இதை படித்தாவது திருந்துவார்களா?

பிரபாகர்.

பித்தன் 4:00 PM, August 12, 2009  

naanum vazimozigiren

UM 5:59 PM, August 12, 2009  

Angila seydhi channel galum idharku vidhi villakalla..Deepika padukone ippo yaroda dating? ponra visyangalai yellam alasuvaargal..
"pub" il pengal thakkppatal oru vaaran oppari vaipa vargal ,ilangaiyil appavi makkam padum thunbangalai kandu kolla maataargal..yellam ore kuttayil ooriya mattaigal...um.Krish

Anonymous 6:04 PM, August 12, 2009  

2012ல் உலகம் அழியப் போகிறதா? என்று ரிப்போர்ட்டரில் பரபரப்புக்காக
எழுதியது நீங்கள்தானே

செம்புலம் 7:07 PM, August 12, 2009  

இயற்கைக்கு புறம்பாக உயிரிணங்களை வளர்ப்பதன் விளைவாகவே 'பன்றி காய்ச்சல்' போன்ற நோய்கள் வருவதாக அறிவியல் உண்மைகள் தெரிவிக்கின்றன.

இயற்கைக்கு புறம்பாக மனிதன் சென்றதற்கு கொடுக்கும் விலைதான் 'மனிதன் நோயினால் 'இயற்கை எய்துவதாகும்.

ஒரு வேளை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருந்தால் தமிழகத்தில் பன்றி காய்ச்சல் ஊடத்தில் முதலிடத்தில் இருந்திருக்காது என நினைக்கிறேன்.

- சென்னைத்தமிழன்

ஆதித்தன் 12:57 AM, August 13, 2009  

ஊருக்கு நல்லது சொல்வோம்! நமக்குண்மை தெரிந்தது சொவோம்!

Prakash 11:21 AM, August 13, 2009  

இந்தியாவில் சார்ஸ் பற்றி எத்தனையோ கட்டுரைகள் பத்திரிக்கைகளில் குவிந்தன! மொத்தம் எத்தனை நபர் பாதிக்கப்பட்டனர்? மூன்று. இறப்பு? பூஜியம் . பன்றி காய்ச்சலின் வீரியத்தை குறைத்து மதிப்பிடவில்லை. டி.பி , வயிற்று போக்கினால் சாகும் இந்திய மக்களின் எண்ணிகையை பற்றி எந்த நாளிதழ்களும் கட்டுரை வெளியிடுவது இல்லையே? . யாரை தாக்குகிறது என்பதை பொருத்து தான் லக்கி செய்திகளே. பிபிசி ஆனாலும் சரி சி.என்.என் ஆனாலும் சரி " வாங்கும்" வாடிக்கையாளர்களை குறி வைத்து தான் செய்திகளே வருகின்றன. ஒரு நாட்டில் எழுபது சதவிகிதம் மக்களிடம் நம் செய்தி தாள்கள் உரையாடவில்லை என்றால் யாரை பற்றி எழுதுகின்றன ?

ராஜகோபால் 1:51 PM, August 13, 2009  

லக்கி அண்ணே, நீங்க சொல்றது சரிதான்.இதை விட அதிகமா, தற்கொலை சாவுகளும், வாகன விபத்து சாவுகளும் அதிகம். அது சரி அண்ணே, ப்லாக் படிச்சா பன்றி காய்ச்சல் வராதே??

ராஜகோபால் 1:52 PM, August 13, 2009  

:-))

C 1:15 AM, August 14, 2009  

உங்களுக்கு வேண்டிய ஹிட்ஸ் கிடைச்சுடும்.

புருனோ Bruno 9:47 AM, August 16, 2009  

அது சரி

பதிவு வார்ப்புரு கிழக்கிலிருந்து பெறப்பட்டது போல் தெரிகிறதே

புருனோ Bruno 9:47 AM, August 16, 2009  

// இன்று காலை ஒரு தமிழ் நாளிதழில் பன்றிக்காய்ச்சல் குறித்து ஒரு ஜோசியர் சொன்னதை கட்டம் கட்டி வெளியிடப்பட்டதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டேன். //

என் இடுகையை படித்தீர்களா :) :) :)

புருனோ Bruno 9:56 AM, August 16, 2009  

//உலகளவில் ஊடகங்களிடம் இரண்டு பாணி உண்டு. ஒன்று பிபிசி பாணி. மற்றொன்று சி.என்.என் பாணி. நடந்ததை நடந்ததாக சொல்லுவது பிபிசி பாணி. நடந்த விஷயங்களை வைத்து என்னவெல்லாம் இனி நடக்கும் என்று யூகித்து செய்து வெளியிட்டு, சென்சேஷனல் ஆக்குவது சி.என்.என். பாணி. பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் பரவும் காலங்களிலும், பேரிடர் சமயங்களில் மட்டுமாவது பிபிசி பாணியை நம் ஊடகங்கள் பாவித்தால் தேவலை.
//

மூன்றாவது பாணி ஒன்று உள்ளது

சன் http://en.wikipedia.org/wiki/The_Sun_(newspaper) பாணி

அது தான் இங்கு நடக்கிறது

புருனோ Bruno 9:57 AM, August 16, 2009  

//குமுதம் ரிப்போர்ட்டரில்
நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்
என்பதை மறந்து விட்டுப் பேசுகிறீர்கள்.//

அவர் என்ன பீதியை கிளப்புகிறார் அல்லது வதந்தியை கிளப்புகிறார் என்று விளக்க முடியுமா

புருனோ Bruno 9:59 AM, August 16, 2009  

//இயற்கைக்கு புறம்பாக உயிரிணங்களை வளர்ப்பதன் விளைவாகவே 'பன்றி காய்ச்சல்' போன்ற நோய்கள் வருவதாக அறிவியல் உண்மைகள் தெரிவிக்கின்றன.
//

ஐயா

பன்றிக்காய்ச்சல் என்பது ஏதோ ஒரு புதிய நோய் அல்ல.

இன்ப்ளுயென்சா தான்

கடந்த 300 வருடங்களாகவே இது மனிதனை தாக்கிக்கொண்டுதானிருக்கிறது

நீங்கள் கூறும் அறிவியல் உண்மைகள் எங்கிருந்து பெறப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாமா

Back to TOP