July 18, 2009

வேலுபிரபாகரனின் காமக்கதை!


காதல் என்ற சொல்லுக்கு எந்த பொருளுமில்லை. பெண்ணின் உடல் மீதான ஈர்ப்பும், காமமுமே நம் சமூகத்தில் காதல் என்று சொல்லப்படுகிறது. இந்த காதல் என்ற கருமாந்திரம் இல்லாவிட்டால் இந்தியர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு முன்பே பல்பை கண்டுபிடித்து ஆட்டு ஆட்டுவென்று ஆட்டியிருப்பார்கள் என்ற சிந்தனையை உரக்கச் சொல்லவே காதல் கதை என்ற செல்லுலாய்டு குப்பையை கொட்டியிருக்கிறார் வேலுபிரபாகரன்.

சென்சார் இப்படத்தைப் போட்டுக் குதறியதில் எந்த தப்புமேயில்லை. பாடாவதி படத்தை திரும்ப திரும்ப சோர்வடையாமல் போட்டுப் பார்த்து வெட்டித்தள்ளிய சென்சார் அதிகாரிகளுக்கு கலாச்சார அமைச்சகம் சம்பள உயர்வு கொடுக்கலாம். பாடல் காட்சிகளிலும், ஏனைய காட்சிகளிலும் தாராளமாக செமி நியூட். படத்தில் நடித்த நடிகைகளுக்கு மார்பகம் குறித்த பிரக்ஞையே சற்றும் இல்லை என்பதால் தமிழ் சினிமா ஹாலிவுட் அளவுக்கு சைஸில் பெருத்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.

காதல் மற்றும் காமம் குறித்த வேலுபிரபாகரனின் உளறல்களுக்கு இடையே பகுத்தறிவுப் பிரச்சாரக் கொடுமை. ஒரு காட்சியில் வேலுபிரபாகரன் பெரியார் வேடத்தில் தோன்றிப் படுத்துகிறார். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கிறது? கொஞ்சமும் சரக்கில்லாத மூன்றாந்தர இந்த பிட்டுப் படத்தை எடுத்துவிட்டு இத்தனை நாளாக ஊடகங்களில் வேலு பிலிம் காட்டிக் கொண்டிருந்தது ரொம்பவும் ஓவர். ரஜினிகாந்த் இப்படத்துக்கு பொருளாதார ரீதியாக உதவியிருந்தால் அதைவிட நகைச்சுவை வேறெதுவுமில்லை.

ஹீரோயின் ஷெர்லினின் கண்கள் மட்டும் ஆறுதல். முதல் படமென்றாலும் திறந்த மனதோடே கேமிராவை அணுகியிருக்கிறார். பாபிலோனா உள்ளிட்ட மற்ற கட்டைகளும் தங்கள் திறமையை சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள். இவர்களின் இடுப்புக்கும், மார்புக்கும் ஸ்பெஷல் லைட்டிங் அமைப்பதிலேயே கேமிராமேனின் மொத்தக் கவனமும் இருந்திருக்கிறது.

பெண் உடல் மீதான கிளர்ச்சி இளைஞர்களுக்கு இருப்பதாலேயே நாட்டில் நடைபெறுகிற குற்றங்களில் எண்பது சதவிகிதம் பாலியல் குற்றமாக இருக்கிறது என்று முதல் காட்சியிலேயே பாடம் போதிக்கும் வேலுபிரபாகரன் இப்படம் மூலமாக தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. மாறாக மேலும் பாலியல் குற்றங்கள் முன்பைவிட தீர்க்கமாக நடைபெற உந்துசக்தியாக இப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார். வரைமுறையற்ற காமத்துக்கு சுதந்திரம் கோருகிறார். இந்த கண்ணறாவியைப் பார்த்துவிட்டு எந்த மாதிரியான விவாதம் சமூகத்தில் கிளம்பும் என்று அவர் எதிர்பார்க்கிறாரோ புரியவில்லை.

பிரபல கவர்ச்சி நடிகையை வேலுபிரபாகரன் திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் வாழ்ந்திருக்கிறார். அவர் மீது கொண்டது காதலல்ல, வெறும் காமம் என்றுணர்ந்து விலகியிருக்கிறார். பிறகு வேறொரு பெண்ணிடம் காதல்வசப்பட்டு.. மன்னிக்கவும் காமவசப்பட்டு, பின்னர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். எனவே காதல் என்பது பொய், காமம் என்பதே மெய் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இப்படியாக சொந்தவாழ்வில் ஏற்பட்ட சில காம, காதல் குளறுபடிகளால் மனம் குழம்பி ‘வேலுபிரபாகரனின் காதல் கதை' என்று படமெடுத்து மக்களையும் குழப்ப கிளம்பியிருக்கிறார்.

ஆர்ட் டைரக்‌ஷன் தவிர்த்து தொழில்நுட்பரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் மகா மகா மட்டமான படைப்பு இது. ஒரு மேட்டர் படத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டுமோ, அப்படியே கச்சிதமாக இசையமைத்திருக்கிறார் இசைஞானி. தியேட்டரில் எக்ஸ்ட்ரா பிட் ஓட்டாதது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி முழுநீல வண்ணப்படம். அரங்கு நிறைந்து ஓடுகிறது. இதுபோதாதா வேலுபிரபாகரனுக்கு?


Tamilish - தமிழ்

July 17, 2009

உங்களில் யார் அடுத்த நயன்தாரா?


போனமாதத்தில் ஒரு நாள் அதிகாலை ஏழரை மணிக்கு, லுங்கி கட்டிக்கொண்டு லைட்டான மேக்கப்பில் சத்யன் டீ ஸ்டால் வாசலில் இருந்த பொட்டீக்கடையில் குமுதம் ரிப்போர்ட்டர் (Branding.. Branding) வாங்கப் போயிருந்தேன். தினத்தந்தியைப் புரட்டிக் கொண்டிருந்த அவர் பப்ளிக் கக்கூசில் க்யூவுக்கு நிற்கும் அவசரத்தோடு சொன்னார்.

“தம்பி.. ஒரு நிமிஷம் நில்லு! மேட்டர் கேள்விப்பட்டியா?” - அண்ணாச்சி சரியான சரக்கு வண்டி. முந்தைய நைட்டு அடித்த ஓல்டு மாங்க் கப்பு கப்பென்று அசுகந்தமாய் தேநீர்க்கடை முழுக்க பரவியது. டீ குடித்துக் கொண்டிருந்த சிலர் வாந்தி வரும் முகபாவத்தை காட்டினார்கள்.

“சொல்லுங்கண்ணே!” ஜூனியர் விகடனில் செல்போன் டவர் பிரச்சினைக்கு போட்டோவோடு பேட்டி கொடுத்ததிலிருந்து - அந்தப் பேட்டியால் வேறு பிரயோசனமில்லை. இன்னும் ஏகப்பட்ட டவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிறுவப்படுகிறது என்பது வேறு விஷயம் - மடிப்பாக்கத்தில் நிஜமாகவே நான் ஒரு செலிபிரிட்டி. எந்த பொதுப்பிரச்சினையாக இருந்தாலும் ட்ராபிக் ராமசாமியிடம் சொல்லுவது போல சிலபேர் என்னிடம் சொல்கிறார்கள்.

“நம்ம ஊரு ரொம்ப கெட்டுப்போச்சி. நைட்டுலே என்னென்னவோ அசிங்கம் நடக்குது!”

ஆஹா. ’மேட்டர்’ நழுவி டீயில் விழுதே. கலர் போட்டோவோடு இன்னொரு ஜூ.வி. பேட்டி.

“என்னாச்சுண்ணே!”

“நம்ப குளம் வத்திப் போச்சுல்லே. வத்திப் போனது இந்த பொறுக்கி பயலுங்களுக்கு வசதியாப் போச்சி”

மடிப்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகில் குளம் என்ற பெயரில் ஒரு மட்டமான குட்டை உண்டு. சோழர் காலத்தில் ஓதீஸ்வரர் கோயில் குளமாக இருந்தது மட்டுமே அக்குளத்துக்கு எஞ்சி நிற்கும் பெருமை. குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் ஏற்பட்டு, கழிவுகள் அசால்ட்டாக குளத்துக்கு திருப்பி விடப்படுவதால் அது குளமா இல்லை கூவமா என்று குடியிருப்புச் சங்கங்களால் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.

பல ஏக்கர் பரப்பளவு வாய்ந்தது என்பதால், அதை ஆட்டை போட்டு துட்டாக்கிவிடலாம் என்ற ஆசை லோக்கல் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. எனவே தற்காலிகமாக குப்பை கொட்டி குப்பை மேடாக்கி மடக்கிப் போடும் திட்டத்தோடு இருக்கிறார்கள். மழைக்காலங்களில் மட்டும் மழைநீர் தூய்மையாக பொழிந்து, குளத்தில் தேங்கி ஓரிருநாட்களில் அசுத்தமாகிவிடும்.

அக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரை கருமையான நீர் குளத்தை அலங்கரிக்கும். எருமைகளுக்கு இக்காலக்கட்டம் கொண்டாட்டமானது. பச்சையான ஆகாயத்தாமரை இலைகளை கருப்பாக எங்காவது பார்த்திருக்கிறீர்களா? மடிப்பாக்கத்தில் மழைக்காலத்தில் பார்க்கலாம். இப்படிப்பட்ட கொடூரக்குளத்தை நம்பியும் விறால் மீன்கள் வளருகிறது என்பது இயற்கைக்கே சவால் விடும் விஷயம். மீன்பாடி வண்டியில் மூட்டை மூட்டையாக பிடித்துக் கொண்டு போகிறார்கள்.

மடிப்பாக்கத்தின் தன்னிகரில்லா தெருநாய்களின் வேடந்தாங்கலும் இந்த குளமே. நாள் முழுக்க தெருக்களில் போவோர் வருவோரை கடித்துவிட்டு, இரவுகளில் ‘இன்னபிற’ மேட்டர்களுக்காக நாய்கள் மாநாடு இங்கே நடக்கும்.

இச்சிறப்புகள் வாய்ந்த குளத்தைப் பற்றிதான் நம்ம அண்ணாச்சி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

105 டிகிரி வெயிலில் சாக்கடைநீரும் கூட வற்றிப்போக, குப்பைமேட்டுக்கு இடையில் கான்க்ரீட் கொட்டி பசங்க சில பேர் போனமாதம் கிரிக்கெட் பிட்ச் அமைத்து விளையாடி வருகிறார்கள். உண்மையிலேயே நல்ல பசங்க. அந்தப் பசங்களைதான் இவர் பொறுக்கிப் பசங்க என்கிறாரோ என்று சந்தேகம் வந்தது. மேலும் சரக்கு வண்டி அண்ணாச்சி தொடர்ந்தார்.

“நேத்து நைட்டு சுமாரா பண்ணிரண்டரை, ஒரு மணி இருக்கும். நாய்ங்க ரொம்ப மோசமா ஊளையிட்டிக்கிட்டிருந்திச்சி. திடீர்னு எல்லாமே சைலண்ட் ஆயிட்டதாலே தூக்கம் களைஞ்சிப்போயி வெளியே வந்தேன்”

இந்த நாய்கள் ஊளையிடல் பற்றி இடைசெருகியே ஆகவேண்டும். குளிர்காலமான கார்த்திகை மாதத்தில் துணைதேட ஊளையிடுகின்றன. இரவுகளிலும் அனல் வீசும் மே, ஜூன் மாதங்களில் ஊளையிட காரணமேயில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். தின்ற குப்பை ஜீரணமாகாமல் ஊளையிடுகின்றன என்பது என்னுடைய அறிவியல் கண்டுப்பிடிப்பு.

வெளியே வந்த அண்ணாச்சி கண்டினியூகிறார்.

“அதுக்கு முன்னாடி லைட்டா ஆட்டோ சத்தம் கேட்டுச்சி. குளத்துக்கு நடுவுலே பசங்க கிரிக்கெட் ஆட பிச்சி போட்டிருக்கானுங்க இல்லே. அங்கே ஒரு ஷேர் ஆட்டோ நின்னுச்சி. நாலு தடிப்பயலுக எறங்கி பிஸ்கட் பாக்கெட்டை பிரிச்சி நாய்ங்களுக்கு போட்டு சைலண்டு ஆக்கிட்டிருந்தானுங்க”

“ம்.. ஒருவேளை தண்ணியடிக்க வந்திருப்பானுங்களோ”

“அப்படி வந்திருந்தானுங்கன்னா நானும் போயி ஒரு பெக் அடிச்சிருக்க மாட்டேனா? பின்னாடியே ஒரு பொண்ணு எறங்கிச்சிப்பா. அப்புறமென்ன நடக்கக்கூடாத அசிங்கமெல்லாம் நடந்தது. எல்லா கருமத்தையும் தூரமா ஒளிஞ்சி நின்னு பார்த்தேன்”

“நெஜமாவா அண்ணாச்சி? நம்ம ஊருப்பசங்க பொண்ணு மேட்டர்லே எல்லாம் இவ்ளோ மோசமில்லையே? யாராவது வெளியூரு ஆளுங்களா இருக்கும்”

“அட நீ ஒண்ணு. அந்தப் பசங்க நம்ம ரூட்லே ஆட்டோ ஓட்டுற பசங்கதான். எனக்கு தெரியாதா என்ன?”

“அப்புறம்?”

“தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு கடைசி வீட்டு கதவைத் தட்டி அந்த அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு போயி நியாயம் கேட்டேன்” - அண்ணாச்சி குறிப்பிடும் கடைசி வீட்டம்மா கிட்டத்தட்ட சொர்ணாக்கா மாதிரி இருப்பார். அவர் வீட்டு கதவைத்தட்டி கூப்பிடதான் அண்ணாச்சிக்கு தைரியம் தேவைப்பட்டதே தவிர, பொறுக்கிப்பசங்களிடம் போயி நியாயம் கேட்க தேவையான தில்லு அவரிடமே இருந்தது.

“நல்ல வேளை செஞ்சீங்க?”

“அடப்போப்பா. அவனுங்க அந்தம்மாவை நாங்க இன்னா உன் கைய புடிச்சா இழுத்தோம்னு சொல்லி பிரச்சினை பண்ணிட்டானுங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை” என்றார்.

“கவலைப்படாதீங்க அண்ணாச்சி. தலைவரு கிட்டே சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். இல்லேன்னா போலிஸுக்கு போவலாம்” என்றேன்.


ண்ணாச்சி சொன்னதை கேட்டதிலிருந்து ஒரு க்யூர்யாஸிட்டி (தமிழ்லே மிகச்சரியான வார்த்தை குறுகுறுப்பா?) இருந்தது. கையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில இலக்கியப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு மறந்துப்போனேன்.

ஆனாலும் பராபரியாக நிறைய செய்திகள் தினமும் வந்துக்கொண்டிருந்தன. குட்டையில் எஞ்சியிருக்கும் தண்ணீரில் குஜிலியோடு பசங்க ஜலக்கிரீடை செய்வதாகவும், காலையில் போய் பார்த்தால் நிறைய நிரோத்து (எந்த பிராண்டாக இருந்தாலும் நம்ம ஆளுகளுக்கு அது நிரோத் தான்) விழுந்து கிடப்பதாகவும், சரக்கு பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணமே இருந்தன.

போனவாரத்தில் ஒருநாள் முரளியை துணைக்கு அழைத்துக் கொண்டேன். முரளி என்னுடைய பாடிகார்ட்-கம்-நண்பன். பாடிகார்ட் என்று வார்த்தைக்கு சொன்னாலும் அவனுடைய பாடி கோழி பாடி. ஆனாலும் வாய் உதாரில் பெரிய ரவுடி போல பில்டப் கொடுக்கக்கூடிய சாமர்த்தியம் கொண்டவன். ஏற்கனவே இதே குளத்தில் நள்ளிரவில் பேய்கள் குளிப்பதாக பரவிய மர்ம வதந்தியை அவனுடைய உதவியால் கட்டுடைத்து பகுத்தறிவு சேவை செய்த புண்ணியம் எனக்குண்டு. இரவுகளில் யாரோ தண்ணீரை மொண்டு மொண்டு குளிப்பது போல சத்தம் வந்தது உண்மைதான். முரளியின் உதவியோடு புலன்விசாரணை செய்ததில் வெறிநாய்கள் வெறிதீர குளத்தில் உருண்டு, புரண்டு விளையாடியதால் ஏற்பட்ட சத்தம் அது என்பதை தரவுகளோடு பொதுமக்களுக்கு நிரூபித்தேன்.

மனிதன் க்ளைமேக்ஸ் ரஜினி கணக்காக அன்று இரவு பதினோரு, பதினொன்றரை மணியளவில் காஸ்ட்யூம்ஸ், கேன்வாஸ் ஷூ எல்லாம் அணிந்தேன். அச்சந்தர்ப்பத்துக்கு பொருத்தமில்லாத தொப்பி ஒன்றும் ஸ்டைலுக்கு அணிந்துகொண்டேன். இடையில் ஒரு பாதுகாப்புக்காக காய்கறி வெட்டும் கத்தி ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டேன். அப்பாவின் அந்தக்காலத்து பெரிய டார்ச்சையும் எடுத்துக் கொண்டேன். முரளிக்கு சிக்னல் கொடுத்தேன். ஏதோ ஆந்தை அலறுகிறது என்று நினைத்து புரண்டு படுத்திருக்கிறான் மூதேவி.

இவன்களை வைத்துக்கொண்டு புல்லு கூட புடுங்கமுடியாது என்று புலம்பியபடியே கதவைத்தட்டி எழுப்பி அழைத்துச் சென்றேன். நக்சல்பாரிகளுக்காக லால்கரில் போராடும் பழங்குடியினர் கெட்டப்பில் இருந்தான். மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் மருதுபாண்டி, வெள்ளைத்துரை மாதிரி லுங்கி கட்டிக்கொண்டு வெற்றுடம்பில் கருப்பு பெட்ஷீட் போர்த்தியிருந்தான். கையில் ஒரு டெர்ரர் லுக்குக்காக கோல் ஒன்றும் வைத்திருந்தான். அவனைப் பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது.

குளத்தை நெருங்கும்போது தூரத்தில் சிகரெட் நெருப்பு இரண்டு மூன்று தெரிந்தது. அவர்களிடம் போய் என்ன பேசப்போகிறோம் என்ற திட்டம் எதுவுமில்லை என்றாலும், ஏதோ ஒரு ஆர்வத்தில் இருவரும் பயணித்தோம். ஏற்கனவே இதே மாதிரி விவகாரத்தை (குஜிலி மேட்டர் அல்ல, வெறும் தண்ணி மேட்டர்) போலிஸ் ப்ரெண்ட்ஸ் துணையோடு சுமூகமாக தீர்த்துவைத்த அனுபவமும் எங்களுக்குண்டு.

அருகில் நெருங்கியபோது கசமுசா சத்தம் எழுந்தது. நான்கைந்து பயல்கள் அவசரமாக எழுந்து நின்றார்கள். ஆட்டோ எதையும் காணவில்லை. இரண்டு மூன்று பைக்குகள் மட்டுமே.

“அட நம்ம அண்ணண்டா” - நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது பிறந்த பயல் ஒருத்தன் கையில் பீர்பாட்டிலோடு சொன்னான்.

முரளி குரல் கொடுத்தான் “ஏண்டா ஊடுங்க இருக்குற எடத்துலே இதுமாதிரி குட்சிட்டு கும்மாளம் போட்டா வெளங்குமா? உங்க அப்பன் ஆயியெல்லாம் கேக்க மாட்டாங்களாடா?”

“இல்லேன்னா. இன்னிக்கு மட்டும்தான். ஊர்லே இருந்து ப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. பார்ட்டி கொடுக்கறோம். நீயும் கொஞ்சம் சாப்பிடுண்ணா” - தாகமாக இருந்தாலும், சின்ன பயல்களிடம் வாங்கி குடிக்க மனசு ஒப்பவில்லை. வாழ்த்து(?) சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம்.


தெல்லாம் சரக்கு அண்ணாச்சி கிளப்பிவிட்ட வதந்தியாகதான் இருக்கணும். ஆனா சாட்சிக்கு கடைசி வீட்டு அம்மாவை வேறு அலிபியாக சேர்த்திருக்கிறாரே என்று குழப்பமாக இருந்தது. கடைசி வீட்டு அம்மாவும் கூட அவ்வப்போது சரக்கு சாப்பிடுவதை ஹாபியாக கொண்டிருக்கிறார் என்பதால் அவரது சாட்சியும் நம்புவதற்கில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

இன்று காலை அலுவலகத்துக்கு பைக்கில் வந்துக்கொண்டிருந்தேன். பெந்தேகொஸ்தே சர்ச் அருகில் சரக்கு அண்ணாச்சி கை காட்டி வண்டியை நிறுத்தினார்.

“விஷயம் தெரியுமா தம்பி. நேத்து நைட்டு அந்த ஷேர் ஆட்டோ பசங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் துட்டு மேட்டருலே செம தகராறு. ஒரே சத்தம். அக்கம் பக்கம் யாரும் தூங்க முடியல”

“இல்லியே அண்ணாச்சி. வெசாரிச்சி பார்த்ததுலே எப்பனாச்சுக்கும் சில பசங்க தண்ணி அடிக்கிறானுங்க. மத்த கலாட்டா ஏதுமில்லைன்னு சொல்றாங்களே?”

“அப்ப நானென்ன பொய்யா சொல்றேன். வேணும்னா கடைசி வூட்டு அம்மாவை கேட்டுப் பாறேன்! நேத்து அவங்களும்தான் பாத்தாங்க!”

ஷேர் ஆட்டோ அழகி குழப்பம் மறுபடியும் மனசை ஆக்கிரமிக்கிறது.


Tamilish - தமிழ்

July 16, 2009

மோகன் அண்ணா!


எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எந்த பையனும் தலைநீட்ட வீடுகளில் அனுமதிக்கப்படாது என்பதால் மற்றக்கிழமைகளில் வந்து வெட்டிவிட்டு ரெண்டு ரூபாயோ, மூன்று ரூபாயோ வாங்கிச் செல்வார்.

எனக்கு முடிவெட்டும் போது தலையை அசைத்துக்கொண்டே இருப்பேன். அவருக்கு வாகாக தலையை காட்டமாட்டேன். “சாவுற காலத்துலே சங்கரா, சங்காரான்னு கெடக்க வேண்டிய வயசுலே இவங்கிட்டே அவஸ்தைப் படுறேன்!” என்று புலம்பிக்கொண்டே வெட்டுவார். முடிவெட்டி முடித்ததும் கண்ணாடியைப் பார்த்து நொந்துவிடுவேன். அம்மா “ஷாட்டா வெட்டுங்க” என்று தான் கன்னியப்பனிடம் சொல்லியிருப்பார். கன்னியப்பனோ கிட்டத்தட்ட மொட்டையே அடித்துவிடுவார். மீண்டும் முடி வளர்ந்து ஒரு நிலைக்கு வர கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிடும். ஒருநாள் திடீரென்று அந்த கன்னியப்பன் இறந்துப் போனார். கன்னியப்பனுக்கு நான்கு மகன்கள் என்பதாக நினைவு. கன்னியப்பனின் இரண்டாவது மகன் தான் மோகன் அண்ணா. மற்ற மகன்கள் வேறு வேறு தொழில்களுக்கு மாறிவிட மோகன் அண்ணா மட்டும் அப்பாவின் தொழிலை தொடர்ந்தார்.

கன்னியப்பன் வீடு வீடாக சென்று நாவிதம் செய்து பெரியதாக சொத்து எதுவும் சேர்த்துவிடவில்லை. சம்பாதித்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் குடித்தே அழித்தார். மோகன் அண்ணா இளைஞராக இருந்ததால் கொஞ்சம் புத்திக் கூர்மையோடு செயல்பட்டார். கூட்ரோடில் ஒரு கடை வாடகைக்கு பிடித்து சுழலும் நாற்காலி போட்டார். கண்ணாடிக்கதவு போட்டு பச்சைக்கலர் ட்யூப் லைட்டை பொருத்தி நவீன மோஸ்தரில் ஒரு கடையை உருவாக்கினார். கன்னியப்பன் போல ரெண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்கெல்லாம் முடிவெட்டாமல் ஒரு வரையறுக்கப்பட்ட தொகையை தன் வேலைக்கு கூலியாக வாங்கினார் மோகன். ஊர் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அவரவர் வீட்டுக்கே சென்று முடிவெட்டி விட்டு வருவார். மடிப்பாக்கத்தில் முதன்முதலாக சலூன்கடை வைத்தது மோகன் அண்ணா தான் என்று நினைக்கிறேன்.

சலூன்கடை வைத்திருந்தது மட்டுமல்லாமல் மோகன் அண்ணாவுக்கு வேறு பணிகளும் இருந்தது. ஊரில் யார் இறந்தாலும் மரண அறிவிப்பினை ஊர்முழுக்க சொல்வது மோகன் அண்ணாவுக்கு சாதிரீதியாக கொடுக்கப்பட்ட பணி. அவர் தந்தை செய்துவந்த இந்தப் பணியை மோகன் அண்ணாவும் எந்த முகசுளிப்புமின்றி தொடர்ந்து செய்துவந்தார். கூடுதல் வருமானம் இதில் கிடைத்ததும் கூட அவர் இந்த பணியை விரும்பி செய்ய காரணமாக இருந்திருக்கலாம்.

இழவு விழுந்த வீட்டில் செய்யவேண்டிய கருமாந்திரப் பணிகள் அனைத்தையும் மோகன் அண்ணா செய்யவேண்டியிருந்தது. தாசரி அழைத்துவருவதிலிருந்து பாடை கட்டுபவன், பறைமோளம் அடிப்பவன், பல்லாக்கு அலங்காரம் செய்பவன் என எல்லோரையும் ஒருங்கிணைத்து சுடுகாட்டில் பிணம் எரியும்வரை மோகன் அண்ணாவின் கடமைகள் தொடரும். பதினாறாவது நாள் காரியத்துக்கான ஏற்பாடுகளும் கூட மோகன் அண்ணாவின் மேற்பார்வையில் தான் நடக்கும். காரியத்துக்கு என்றிருக்கும் அய்யரை கூட்டிவருவதிலிருந்து குளத்தங்கரை மண்டபத்தை புக் செய்வது எல்லாமே மோகன் அண்ணாவே செய்வார்.

யார் வீட்டுப் பக்கமாவது மோகன் அண்ணாவை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம், எங்கேயோ எழவு விழுந்திருக்கிறது என்று. அய்யர் வீடுகளின் மரணம் ஏற்பட்டால் மோகன் அண்ணாவின் சாங்கியரீதியான வேலைகள் எதுவும் தேவைப்படாது என்றாலும் இறந்தவர் கொஞ்சம் ஊரில் பிரபலமான அய்யராக இருந்தால் எல்லோருக்கும் போய் துக்கச்செய்தி சொல்லுவார். இதற்காக அவர் காசு எதுவும் அய்யர் வீடுகளில் வாங்கமாட்டார். அவரவர் விருப்பப்பட்டு குவார்ட்டரோ, ஹாஃபோ வாங்கிக் கொடுத்தால் அது போதுமானது.

சுபகாரியங்களின் போதும் மோகன் அண்ணாவின் தேவை மடிப்பாக்கம் வாசிகளுக்கு தேவைப்பட்டது. அதிகாலையில் மணமகனுக்கு எண்ணெய் நலங்கு வைப்பது போன்ற சடங்குகள் எல்லாம் மோகன் அண்ணாவுக்கு தான் எப்படி முறைப்படி செய்வது என்று தெரியும். கல்யாணத்தில் வண்ணாத்திக்கு துணி கொடுப்பது போன்ற சடங்குகள் கூட உண்டு. மடிப்பாக்கத்தில் யாருக்கு வண்ணான் - வண்ணாத்தியை எல்லாம் தெரியும்? மோகன் அண்ணா தான் எங்கேயோ போய், யாரையோ கூட்டி வருவார்.

ஊரில் மக்கள்தொகை பெருக்கம் ஏற்பட்டு மரணவிகிதம் அதிகரிக்க அதிகரிக்க அவரால் அவர் தொடங்கிய சலூன் கடையில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. எப்போதும் கடையை மூடிவிட்டு சாவு செய்தி சொல்லும் வேலையில் பிஸியாக இருப்பார். வாடிக்கையாளர்கள் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட மற்ற முடிவெட்டும் நிலையங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் மோகன் அண்ணாவுக்கு குடிப்பழக்கமும் உச்சநிலைக்கு போயிருந்ததால் தொழில்நேரத்தில் குடித்துவிட்டு சொதப்பவும் ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் அவரால் சலூன் தொழிலை தொடர்ந்து செய்யமுடியவில்லை. கடையை இழுத்து மூடிவிட்டு தெரிந்தவர்களுக்கு மட்டும் அவரது அப்பாவைப் போல வீட்டுக்கு போய் சவரம் செய்ய ஆரம்பித்தார். நல்லவேளையாக அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் சம்பாதித்த பணத்தில் ஒரு சொந்தவீடு வாங்கியிருந்தார். இதன்பிறகு முழுக்க முழுக்க எங்காவது எழவு விழுந்தால் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது, சுபகாரியங்களில் வருமானம் ரொம்ப கம்மி. எப்போதாவது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களுக்கு தெரிந்த இடங்களை காட்டிவிட்டு மிகக்குறைவான கமிஷன் வாங்குவார்.

குடிக்க கையில் காசில்லாத நேரத்தில் அவரது தொழில்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு டிவிஎஸ்50யில் ஊரை ரவுண்டடிப்பார். “என்ன நாயக்கரய்யா தாடி விட்டிருக்கீங்க? திருப்பதி போறீங்களா?” என்று எதிர்படுபவரை கேட்பார். “அட அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. நேரமில்லே” என்று சொன்னால் உடனே கிடைக்கும் இடத்தில் உட்காரவைத்து ஷேவிங் செய்துவிடுவார். கொடுக்கும் காசை வாங்கிக் கொள்வார். ஒரு ‘கட்டிங்'குக்கு தேவையான துட்டு கிடைத்ததும் நேராக மதுக்கடைக்கு வண்டியை விடுவது அவர் வழக்கமாக இருந்தது. மோகன் அண்ணாவுக்கு அதிர்ஷ்டவசமாக பிறந்தது ரெண்டுமே பையன்கள். பையன்கள் சுமாராக படித்து, வளர்ந்து ஏதோ வேலை, வெட்டிக்கு போய் சம்பாதிக்கிறார்கள். அப்பா, தாத்தா செய்த தொழிலை தொடர அவர்களுக்கு விருப்பமில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மோகன் அண்ணா செத்துப் போய் விட்டார். யார்யாரோ செத்தப் போதெல்லாம் ஊருக்கே செய்தி சொன்ன அவர் செத்துப் போனதை அக்கம்பக்கத்துக்கு சொல்லக்கூட ஆளில்லை. எதேச்சையாக அவர் வீட்டுப் பக்கமாக போனபோது தான் எனக்கே தெரிந்தது. மோகன் அண்ணாவுக்கு நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பதுக்குள் வயதிருக்கலாம். கொஞ்சம் ஒல்லியாக இருப்பார். எவ்வளவு தண்ணி அடித்திருந்தாலும் அண்ணன் சுறுசுறுப்பாக கில்லி மாதிரி சுழன்று சுழன்று வேலை பார்ப்பார். எனக்குத் தெரிந்து அவர் வாழ்நாளில் ஒரு லட்சம் லிட்டராவது மது அருந்தியிருப்பார் என்று நினைக்கிறேன். “இவ்ளோ தண்ணியடிக்கிறீங்களே? ஒடம்புக்கு ஏதாவது ஆயிடாது?” என்று கேட்டால் “தண்ணியால நான் சாவமாட்டேன்டா” என்பார். இப்போது கூட அவர் செத்ததற்கு மஞ்சக்காமாலையை தான் காரணமாக சொல்கிறார்கள்.

மோகன் அண்ணா மரித்துப் போனதற்காக ஊரே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது, “இனிமே யாராவது செத்தா இழவு வேலையை எல்லாம் யாரு பார்க்குறது?” என்று.


Tamilish - தமிழ்

June 23, 2009

’அவள்!’


விக்கித்துப் போயிருந்தான்.

அப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை.

“நீ மட்டும் யோக்கியமா?”

யோக்கியம், அயோக்கியம் வேறுபாடுகள் பார்க்கும் நிலையிலா அப்போதிருந்தான்?

ப்ளாஷ்பேக் ஸ்டார்ட்ஸ்...


வார்த்தைகளுக்கு வாய்ப்பின்றி காலைக் கட்டிக் கொண்டு அழுத மாமா.

”நீங்கதான் எங்க குடும்ப தெய்வம்” - அழுதுகொண்டே அரற்றிய அத்தை.

“மாமா நீங்க இந்த நேரத்துலே உதவலேன்னா குடும்பத்தோடு தூக்குப் போட்டுக்கிட்டு செத்துடுவோம்” - மாமா மகன்.

தன்னை வளர்த்தெடுத்த குடும்பம் ஒப்பாரி வைத்து அழுவதைப் பார்த்து அவனும் அழுதான்.

மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள் ‘அவள்’


லகமே மகிழ்ச்சியைக் கொண்டாடிய அந்த புத்தாண்டு இரவு அவளுக்கு மட்டும் துயர் தந்ததாய் இருந்தது.

“உங்க மாமா குடும்ப கவுரவம் உங்களுக்கு முக்கியமானதா இருக்கலாம். அதுக்காக நான்?”

“.................”

இரண்டு நாட்களுக்கு முன்பாக மட்டுமே அவளுக்கு திருவேற்காட்டில் ரகசியத் தாலி காட்டியிருந்தான். இரண்டாண்டு தெய்வீகக் காதல். இன்னும் திருமணமானது ரெண்டு வீட்டுக்கும் தெரியாது.

அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.

அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.


ழகான ஆண்குழந்தை.

“அப்பனை உரிச்சு வெச்சிருக்கு” சொன்னபோது திடுக்கிடலாய் நிமிர்ந்தாள் ’அவள்’. அவனும் கூட.

அவனுக்கும், அவளுக்கும், அவள் குடும்பத்துக்கும் மட்டும்தானே தெரியும் அப்பன் யாரென்பது.

அவனுக்கு குழந்தை பிறந்தது என்று சுற்றம் கொண்டாடியது. யாரோ ஒருவனின் குழந்தைக்கு இனிஷியல் மட்டுமே தரவேண்டிய தன் விதியை நினைத்து மீண்டும் அழுதான். தனிமையில் அழுதான்.


குடும்பத்தோடு திருவேற்காடு போயிருந்தான். இனிஷியல் மகனை தோளில் சாய்த்திருந்தான்.

ஆயிரம் கல்யாணம் நடத்திவைத்த அர்ச்சகருக்கு இவன் முகம் மட்டும் நினைவில் இருந்து தொலைக்க வேண்டுமா?

“இதுதான் உன் ஆம்படையான்னா, அன்னைக்கு தாலி கட்டினியே? அந்தப் பொண்ணு யாருவோய்?”

உண்மை விளங்கி திரும்பவும் மாமா அழுதார்.

“உன் வாழ்க்கையையும் வீணடிச்சிட்டேனே?” தலையில் அடித்துக் கொண்டு அழுதார். சந்நிதியில் அழுதார். சுற்றி வேடிக்கைப் பார்ப்பவர்கள் குறித்த பிரக்ஞ்சை இன்றி அழுதார்.

ச்சே. இந்த ஆளுக்கு அழமட்டும் தான் தெரியும்.

’அவள்’ இம்முறை பார்த்தாள். வெறுப்போடு பார்த்தாள். கண்களில் தீக்கங்குகளை வைத்துப் பார்த்தாள்.


“யாரு போனுலே?”

“யாரா இருந்தா உனக்கென்ன?” அவள்.

பேருக்கு கணவன் - மனைவியாக இருப்பவர்கள் பேசிக்கொள்வது இப்படித்தானே இருக்கும்? உடலைப் பகிர்ந்துகொள்ள முடியாதவர்களால் உள்ளத்தை மட்டுமா பகிர்ந்துகொள்ள முடியும்?

அடிக்கடி அவளுக்கு போன் வந்தது. குழந்தை அழுவதைக் கூட சட்டை செய்யாமல் போனில் பேசினாள். சிரித்து சிரித்துப் பேசினாள். ஒருவேளை தான் இனிஷியல் கொடுத்த குழந்தையின் உண்மை அப்பனோ?


நேரங்கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்தாள்.

குழந்தையை க்ரெச்சில் சேர்த்திருந்தாள். எதையும் அவன் கேட்டதில்லை.

ஒருநாள் பொறுக்கமாட்டாமல் கேட்டான்.

”எங்கே போயிட்டு வர்றே?”

லேசான வார்த்தைகளில் தொடங்கிய உரையாடல் சூடுபிடித்து உச்சத்தை அடைந்தது.

அப்போதுதான் கேட்டாள் அவள்.

“நீ மட்டும் யோக்கியமா?”

முதல் பத்தியில் தொடங்கிய பிளாஷ்பேக் முடிவுக்கு வந்தது.


விடிந்த பொழுது மோசமான பொழுது.

அவள் ஓடிவிட்டிருந்தால் குழந்தையோடும், கட்டியச் சேலையோடும்.

குழந்தைக்கு உண்மையான இனிஷியல் ஒருவேளை கிடைத்திருக்கக் கூடும்.

மாமா திரும்ப அழுதார். அவர் குடும்பமே சேர்ந்து அழுதது. அழுமூஞ்சிக் குடும்பம்.

ஊரை காலி செய்தான். வீட்டை விற்றான். பணிமாற்றல் வாங்கினான்.

“இன்னொரு கல்யாணத்துக்கு பொண்ணும் வேணும்னா பார்க்கட்டா?” விசும்பியபடியே கேட்ட மாமாவை முறைத்தான்.


டல் வேட்கையோடு அங்கே போனவனுக்கு உள்ளம் வெடித்தது. சுக்கு நூறாய். சுக்கு ஆயிரமாய். சுக்கு லட்சமாய்.

மூன்றாவது பத்தியில் பார்த்த ‘அவள்’ இவள்.

சினிமா ஆசையில் ஓடிவரும் இளம்பெண்களுக்கும், குடும்பத்தை மறந்து திருட்டு காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் சிலருக்கும் ஏற்படும் அதே கதி.

பாவத்தை மறைக்க, மறுக்க என்ன செய்வதென்று புரியவில்லை.. தான் தோன்றித்தனமாக நடந்துகொண்டான்.

அவளின் நகைகளை இவளுக்கு போட்டு அழகு பார்த்தான்.

“இனிமே நீயே வெச்சுக்கோ” அவனுக்கே கேட்காமல் முணுமுணுத்தான்.

அதன்பின் ஒருவரியும் பேசவில்லை இருவரும். முன்பு மனதால் இணைந்தவர்கள் இன்று உடலாலும் இணைந்தார்கள்.

அவள் முகம் பார்த்தான்.

அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.

அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், இப்போதும் ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.

உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதை!


Tamilish - தமிழ்

பார்வை!


ஆட்டோவிலிருந்து இறங்கும்போது உச்சிவெயில் உண்மையாகவே மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. பிளந்துவிட்ட மண்டையை ஈரக்கர்ச்சீப்பால் மூடினேன். சிகப்பான சென்ட்ரல் அடுப்பில் காணக்கிடைக்கும் தீக்கங்குகள் மாதிரி கனகனவென்றிருந்தது. கொடுத்ததை வாங்கிச் செல்லும் ஆட்டோ டிரைவர் வாய்ப்பது முன்னோர் எக்காலத்திலேயோ செய்த புண்ணியம். பயணச்சுமையை முதுகில் தாங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினேன். இரண்டு மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ். மணி ஒன்று நாற்பத்தி ஐந்து.

சரியான நடைமேடை கண்டறிந்து, என் பெட்டியை அடைவதற்குள் சட்டை வியர்வையால் தொப்பலாகிவிட்டிருந்தது. சன்னலோரத்தில் அமர்ந்தேன். லேசான காற்று வியர்வையால் நனைந்த உடல்மீது பட்டது இதமாக இருந்தது. திறந்திருந்த சன்னல் வழியாக பார்வையை ஓட்டினேன். இருப்புப் பாதையில் தேங்கியிருந்த அழுக்கு நீரை இரு காக்கைகள் அருந்திக் கொண்டிருந்தன. அலகால் நீரை உறிஞ்சி வானத்தைப் பார்த்து காக்கைகள் நீரருந்தும் பாணியே அழகுதான்.

என் பக்கத்தில் நாற்பது கூட்டல் வயதுடையவர் அமர்ந்தார். வெள்ளைச்சட்டை. கருப்பு கால்சட்டை. கையில் தினகரன். செய்தித்தாளைப் பிரித்தவாறே பேச ஆரம்பித்தார்.

“ராஜபக்‌ஷேவை போட்டுத் தள்ளணும் சார்”

“ஆமாங்க. டிவி பார்க்குறப்போவெல்லாம் மனசு பிசையுது” பதிலுக்கு பேசியாக வேண்டும். அதுதான் மரியாதை.

“நான் சந்திரசூடன்ங்க. கோயமுத்தூரு. மெட்ராஸ் ஹைகோர்ட்டுலே லாயரா இருக்கேன்” உடனடியாக அறிமுகப்படுத்திக் கொண்டார். கைகொடுத்து என்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

ரயில் கிளம்பப் போவதாக இந்தி, ஆங்கிலம், தமிழில் கொஞ்சம் சுமாரான பெண்குரலில் அறிவிப்பு கொடுத்தார்கள். இஞ்சின் பெட்டியிலிருந்து ஹாரன் சத்தம் கேட்டது. பெட்டி இருக்கைகள் கிட்டத்தட்ட முழுமை அடைந்து இருக்க, எதிர் இருக்கை மட்டும் காலியாக இருந்தது கண்ணை உறுத்தியது.

அவசர அவசரமாக ஒரு பெரியவரும், இருபத்தெட்டு முதல் முப்பது வயது மதிக்கத்தவனும் வந்து அமர்ந்தார்கள். அந்த மதிக்கத்தக்கவன் பெரியவரின் மகனாக இருக்கக் கூடும். எனக்கென்னவோ அவனைப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. சிலபேரை பார்த்ததுமே பிடித்துவிடும். பழகியவுடன் கசந்துவிடும்.

அவன் முகம் வெறிகொண்ட வேங்கையைப் போல இருந்தது. அவனது கண்கள் என்னை மிகவும் துன்புறுத்தியது. அவன் ஒரு சைக்கோ என்று உள்ளுணர்வு உறுத்தியது. இவனோடு பழகினாலும் இவனைப் பிடிக்காது என்று தோன்றியது. பெரியவர் வெள்ளைச் சட்டையும், வேட்டியும் கொஞ்சம் அழுக்காக அணிந்திருந்தார். அவனோ கசங்கிப்போன சட்டையும், சாயம்போன கால்சட்டையுமாக நாகரிகத்துக்கு தொடர்பில்லாதவனாக இருந்தான்.

பக்கத்திலிருந்த லாயரைப் பார்த்தேன். சகப்பயணியாக என்னை திருப்தியோடு பார்த்தவருக்கு எதிர் இருக்கை பயணிகள் அதிருப்தியை தந்திருக்கிறார்கள் என்பது பார்வையிலேயே தெரிந்தது.

பெரியவர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்தார். ரயில் கிளம்பியது. காணாததை கண்டவன் மாதிரி அந்த பிஸ்கட்டை பிடுங்கி கடித்தான் அவன். பிஸ்கட் துணுக்கு சிதறியது. வாயெல்லாம் துகள்கள். நிமிர்ந்துப் பார்த்த எனக்கோ அருவருப்பாக இருந்தது. லாயருக்கும் அதேபோல இருந்திருக்க வேண்டும். ஒரு டவல் துண்டினை எடுத்து முகத்தில் போர்த்திக்கொண்டு இருக்கையில் வசதியாக சாய்ந்தார். அனேகமாக தூங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.

ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க ஜன்னல் வழியாக காற்று ஜம்மென்று உள்நுழைந்தது. திடீரென்று அவன் உட்கார்ந்த நிலையில் குதித்தவாறே, “அப்பா.. அப்பா.. மரமெல்லாம் பச்சையா அழகாருக்குப்பா” என்று கொஞ்சம் சத்தமாக சொன்னான். பெரியவர் பதிலுக்கு “ம்” என்றார். ஒருவேளை மனநிலைப் பிறழ்ந்தவனோ?

“அப்பா அங்கே பாருங்க. எவ்ளோ அழகாயிருக்கு!” குதூகலமான குரலில் கத்தினான். எரிச்சல் மண்டியது.

பக்கத்திலிருந்தவர் துயில் களைந்து காதுக்கு பக்கத்தில் வந்து சொன்னார். “க்ராக்கு பய சார்!”

திடீரென்று இருண்டதைப் போல தோன்றியது. சடசடவென்று மழைத்துளி விழுந்தது. வானம்தான் எவ்வளவு வேகமாக மாற்றத்துக்கு தயாராகிறது. ஜன்னலை மூட எழுந்தேன். அவன் முரட்டுத்தனமாக என் கையைப் பற்றி முறைத்தான். இச்சூழலில் அவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பி, உட்கார்ந்தேன். பெரியவரைப் பார்த்தேன். கெஞ்சும் தொனியில் ஒரு பார்வை பார்த்தார்.

“அப்பா. மழை ஜோன்னு பெய்யுது. ஹைய்யா. ரொம்ப அழகா இருக்கு. சூப்பரா இருக்கு” என்னவோ மழையைப் பார்த்ததே இல்லை என்பது மாதிரி கத்தினான். பெட்டியில் இருந்த மற்றவர்கள் வித்தியாசமாக திரும்பிப் பார்த்தார்கள். பெரியவர் பாவமான தொனியிலேயே அமர்ந்திருந்தார்.

ரயில்வேகத்தில் மழைத்துளி ஜன்னலுக்குள் புகுந்து என் சட்டையை நனைக்க, இதற்குமேல் பொறுக்க முடியாது என்ற நிலையில் ஜன்னலை மூட மீண்டும் எழுந்தேன்.

”ஜன்னலை மூடாதீங்க!” முரட்டுக்குரலில் சொன்னான். எரிச்சல் எல்லை மீறிப் போனது.

“ஏன் சார்? பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே இவனை சேர்த்து சரி செய்யுறதை விட்டுட்டு, வயசான காலத்துலே இப்படி கஷ்டப்படறீங்க?” பெரியவரிடம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டேன். அவனது முகம் இருளடைந்தது. இதெல்லாம் மட்டும் புரியும்.

அவர் அமைதியாக சொன்னார்.

“தயவுசெஞ்சு தொந்தரவுக்கு மன்னிச்சுடுங்க தம்பி. ஆஸ்பத்திரியிலிருந்து தான் வர்றோம். அவனுக்கு ஜூரம் வந்து பத்து வயசுலே பார்வை போயிடிச்சி. போனவாரம் தான் கண் தானம் மூலமா அவனுக்கு மறுபடியும் பார்வை கிடைச்சிருக்கு. மழையும், மரமும் அவனுக்கு புதுசாதான் தெரியும்”

ஜன்னலை மூடாமலேயே லேசாக அதிர்ச்சியடைந்து இருக்கையில் சாய்ந்தேன். பக்கத்து சீட்டுக்காரர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். அவன் எதுவும் நடக்காதது போல மீண்டும் மழையை ரசிக்க ஆரம்பித்தான். கடந்துச்சென்ற டீனேஜ் பெண் ஒருத்தியின் டீஷர்ட்டில் ”Don't Judge Too Soon” என்று எழுதியிருந்தது.

நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஆங்கில மின்னஞ்சல் சமாச்சாரத்தை தழுவி புனையப்பட்ட கதை.


Tamilish - தமிழ்

லைவ்!

லைவ்!

தொடர்புக்கு!

மின்னஞ்சல் :
yuvakrishna@gmail.com

கைப்பேசி :
+919841354308

மின் சந்தா

Your email address:


Powered by FeedBlitz

Followers